கோவை கார் வெடிப்பு வழக்கு.. முபின் வீட்டிற்கு குற்றவாளிகளை அழைத்து வந்து விசாரணை.. 'பரபர' தகவல்
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டிற்கு அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் நடத்திய இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இதை வைத்து இந்த வழக்கை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கார் வெடிப்பு வழக்கில் அடுத்தடுத்து பல முக்கிய திருப்பங்களும், கைது சம்பவங்களும் அரங்கேறி வரும் நிலையில், தற்போது நடந்திருக்கும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழகத்தை உலுக்கிய சம்பவம்
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் சென்ற மாருதி கார், சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது திடீரென பயங்கரமாக வெடித்து தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்ததார். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் காரில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்தது தெரியவந்தது. மேலும், அந்தப் பகுதியில் ஆணிகள், கோலி குண்டுகள் இருந்ததால் இது தீவிரவாத செயலாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

வெடிப்பொருட்கள் பறிமுதல்
இதன் தொடர்ச்சியாக, ஜமேஷா முபீன் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருட்கள், வயர்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கை என்ஐஏ கையில் எடுத்தது. பின்னர் தீவிர விசாரணையில் இறங்கிய என்ஐஏ அதிகாரிகள், கோவை ஜிஎம் பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் ஆகியோரை கைது செய்தனர்.

நள்ளிரவு விசாரணை
மேற்குறிப்பிட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பு முகமது தவுபிக் (25), உரம் பரூக் (39), பெரோஸ் கான் (28) ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சூழலில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று இரவு 11.30 மணியளவில் கார் வெடித்த இடத்திற்கும், அதன் அருகே உள்ள பகுதிகளுக்கு என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டிற்கும் அவர்களை அழைத்து சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர்.

காட்டுப் பகுதியில் வைத்தும் விசாரணை
இதையடுத்து, அந்தப் பகுதி அருகே உள்ள காட்டிற்கும் அவர்களை என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அந்தப் பகுதியில் வைத்துதான் ஜமேஷா முபின் உள்ளிட்டோர் தீவிரவாத சதித்திட்டங்களை தீட்டி வந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விசாரணை பல முக்கிய தகவல்களும், ஆவணங்களும் கிடைத்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications