கோவை கார் சிலிண்டர் வெடிப்பு..களத்தில் இறங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு.. நடந்தது என்ன? தீவிர விசாரணை
கோவை: காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் கோவையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். கார் வெடித்த சம்பவம் தொடர்பாகவும் ஜமேஷா முபீனின் பின்னணி குறித்தும் என்ஐஏ காவல்துறையினர் தனித்தனி குழுக்களாக விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் சென்ற மாருதி கார், சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. காரில் 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதும், காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் கோவை வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். உடைந்த காரின் உதிரிபாகங்கள், அங்கு சிதறிக் கிடந்த ஆணிகள், கோலி குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர்.

வெடி பொருட்கள்
உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருட்கள், வயர்கள் உள்ளிட்டவை அங்கு அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். முதலில் இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழப்பு, வெடிபொருள் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் உக்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சிசிடிவி காட்சிகள்
முபின் வீடு அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், 22-ம்தேதி, அதாவது சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவு 11.25 மணிக்கு முபின் வீட்டில் இருந்து அவர் உள்ளிட்ட 5 பேர் ஒரு பெரிய மூட்டையை தூக்கிச் சென்று காரில் ஏற்றும் காட்சி பதிவாகியிருந்தது. அதில் இருந்தது வெடிபொருட்களா, அதை காரில் ஏற்றி எங்கு எடுத்துச் சென்றனர் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முபினுடன் தொடர்பில் இருந்த நபர்கள், அவரது கூட்டாளிகள் யார் யார் என தீவிரமாக விசாரித்தனர்.

5 பேர் கைது
அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் 7 பேரை பிடித்து விசாரித்தனர். உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் 3 பேர்,முபீனின் வீட்டில் இருந்து மூட்டையை தூக்கிச் சென்றவர்கள். முபீன் காரை எங்கு ஓட்டிச் சென்றார், காரில் சிலிண்டர்கள் எதற்காக எடுத்துச் செல்லப்பட்டன, கோயில் அருகே எதேச்சையாக கார் வெடித்து விபத்து நடந்ததா, திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதா என்று அவர்களிடம் தனிப்படையினர் விசாரித்தனர்.

உபா தடுப்புச்சட்டம்
செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, புலன் விசாரணை அடிப்படையில் இந்த வழக்கில் சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன. கூட்டுச் சதி, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் ('உபா'), 2 பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

முபீன் பின்னணி
பொறியியல் பட்டதாரியான முபீனுக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பழைய புத்தகக் கடையில் வேலை செய்துவந்த அவர், சில ஆண்டுகளாக சாலையோரத்தில் பழைய துணிகளை விற்பனை செய்து வந்துள்ளார். உக்கடம் ஜி.எம்.நகரில் வசித்த அவர்,40 நாட்களுக்கு முன்புதான் கோட்டைமேடு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு
கடந்த 2019-ல் ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாதிகளால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஜக்ரன் ஹாசீம் என்ற தீவிரவாதிக்கு தொடர்பு இருப்பதும், இந்தியாவின் தென் மாநிலங்களை சேர்ந்த பலரிடம் ஜக்ரன் ஹாசீம் செல்போன் மூலம் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அவருடன் அடிக்கடி போனில் பேசிய கோவை உக்கடத்தை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரான முகமது அசாருதீன் தற்போது கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கார் வெடிப்பில் உயிரிழந்த முபின்,முகமது அசாருதீனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததும், வாட்ஸ்அப் மூலம் தொடர்ச்சியாக அவர்கள் பேசி வந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர். அதன் அடிப்படையில், 2019ஆம் ஆண்டில் முபீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
இதனிடையே கோவை கார் சிலிண்டர் வெடித்து முபீன் உயிரிழந்தது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். முபீனின் பின்னணி, முபீன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும் காவல்துறையினரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கார் சிலிண்டர் வெடித்தது குறித்த வழக்கு என்ஐஏ வசமாக உள்ளதாகவும் தகவல் வெளியாக உள்ளன.












Click it and Unblock the Notifications