கடும் பிரிவுகளில் வழக்குப்பதிவு.. கோவை பெட்ரோல் குண்டுவீச்சால் சாட்டையை சுழற்றும் போலீஸ் கமிஷனர்
கோவை: கோவையில் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது கடும் பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் பற்றி சில கருத்துகளை தெரிவித்தார். இது சர்ச்சையானதால் பாஜகவினர் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆ ராசாவை மிரட்டியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே தான் நேற்று என்ஐஏ சார்பில் கோவையில் சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள் மீது நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் கோவையில் நடந்தன.

பெட்ரோல் குண்டு வீச்சு
இதற்கு மத்தியில் தான் நேற்று இரவு கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகனுக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

தீவிர விசாரணை-பாதுகாப்பு அதிகரிப்பு
கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின. இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டம் -ஒழுங்கை பாதுகாப்பும் பணியில் தமிழக அரசு தீவிரமான நடவடிக்கையை எடுத்துள்ளது. ‛ரேப்பிட் ஆக்சன் போர்ஸ்' எனும் அதிவிரைவுப்படையில் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காந்திபுரத்தில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

விரைவில் கைது
இந்நிலையில் கோவையின் தற்போதைய நிலை பற்றி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். செக்போஸ்ட் இல்லாத இடங்களில் புதிதாக கேமராக்கள் பொருத்த திட்டம் உள்ளது.

கடும் பிரிவுகளில் கைது
கோவையில் யாரேனும் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். கோவையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications