கோவைனா கெத்து.. முகாமிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்! 32 ஆண்டுக்கு பின் நடக்கும் ரஞ்சி கோப்பை போட்டி
கோவை: இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் முதன்மையானதாக கருதப்படும் ரஞ்சி கோப்பை போட்டி 32 ஆண்டுகளுக்கு பின் இன்று கோவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் பிசிசிஐ-ஆல் விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஸ்தாக் அலி கோப்பை என உள்நாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதைபோல் டெஸ்ட் போட்டிகளுக்கு என ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பல்வேறு மாநில அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீரர்களின் செயல்பாடுகளை வைத்தே இந்திய அணிக்கு என்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்
அந்த வகையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி தற்போது பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. எலைட் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டி டிராவில் முடிவடைந்ததால் தமிழ்நாடு அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தன.
கோவையில் ரஞ்சி போட்டி
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அணி அந்திராவுக்கு எதிரான 2 வது ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் ரஞ்சி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், இன்றைய ரஞ்சி போட்டி கோவையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
32 ஆண்டுகளுக்கு பின்..
கோவை பீளமேடு பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரிக்கு சொந்தமான இந்த கிரிக்கெட் மைதானத்தில் இதற்கு முன்பாக தமிழ்நாடு அளவிலான டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்து உள்ளன. இந்த நிலையில் 32 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சர்வதேச வீரர்கள் கோவையில்
இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், ஹனுமா விஹாரி, ஐபிஎல் போட்டிகளில் ஆடிய ஜெகதீசன், பாபா அபரஜித் உள்ளிட்டோரும் கோவைக்கு வருகை தந்து உள்ளார்கள். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய ஷேக் ரசீதும் இதில் ஆந்திர அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆந்திரா பேட்டிங்
இதில் டாஸ் வென்ற ஆந்திர பிரதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆந்திரா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்து உள்ளது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் அபிஷேக் ரெட்டி 85 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் டெஸ்ட் வீரரும் ஆந்திர அணியின் கேப்டனுமான ஹனுமா விஹாரி 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தமிழ்நாடு பந்துவீச்சு
ரிக்கி புய் 68 ரன்களிலும் ஆட்டமிழக்க, கரண் ஷிண்டே 55 ரன்களிலும், கே.வி.சசிகாந்த் 4 ரன்களிலும் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை சாய் கிஷோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார். சந்தீப் வாரியர், விஜய் சங்கர், அஜித் ராம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். கோவையில் ரஞ்சி கோப்பை போட்டி நடைபெற்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.