அடேங்கப்பா.. குலுங்கிய கோவை ஏர்போர்ட் வளாகம்.. வேலுமணியை வரவேற்க வண்டி வண்டியாக வந்த அதிமுகவினர்
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை விமான நிலையத்தில், அக்கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
Recommended Video
100க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்திருந்த அதிமுக தொண்டர்கள், வேலுமணியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.
எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளில், சில தினங்கள் முன்பு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனைகள் நடத்தியது.

அதிமுகவினருக்கு டிபன், சாப்பாடு, ரோஸ் மில்க்
ஒரு நாள் முழுக்க இந்த சோதனைகள் நடந்தன. சென்னை எம்எல்ஏக்கள் ஹாஸ்டலில் வைத்து வேலுமணியிடம் துருவி துருவி கேள்விகளை கேட்டனர் அதிகாரிகள். இதை கண்டித்து வேலுமணியின் கோவை இல்லம் வெளியே மற்றும் சென்னை எம்எல்ஏக்கள் ஹாஸ்டல் வெளியே அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். கோவையில், போராட்டம் நடத்திய அதிமுகவினருக்கு, காலை பொங்கல், இட்லி போன்ற டிபன்கள், மதியம் சாப்பாடு, மாலை ரோஸ் மில்க் போன்றவை அதிமுக நிர்வாகிகளால் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி சென்ற வேலுமணி
இந்த சோதனைக்கு பிறகு சென்னையிலிருந்து வேலுமணி விமானத்தில் கிளம்பி தூத்துக்குடி சென்றார். அங்கே ஏன் சென்றார், திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு நடத்த சென்றாரா, ஏன் கோவிலுக்கு செல்லவில்லை என பல கேள்விகள் அப்போது எழுந்தன. இதன்பிறகு சட்டசபை கூட்டத் தொடரில் வேலுமணி பங்கேற்றார். இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சென்னையிலிருந்து கோவை கிளம்பிச் சென்றார் வேலுமணி.

விமான நிலையம் அணிவகுத்த வாகனங்கள்
இதனிடையே, வேலுமணி வருகையை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் ஏர்போர்ட் அழைத்து வரப்பட்டிருந்தனர். இதனால் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாழ்த்து கோஷங்கள்
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும், விமான நிலையத்தில், அதிமுகவினர் கூட்டம் குவிந்தது. மேள வாத்தியங்கள் முழங்க, கட்சிக் கொடியோடு, வேலுமணிக்கு ஆரவாரமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிர்வாகிகளால் வேலுமணிக்கு சால்வை போர்த்தப்பட்டது, பூங் கொத்துக்கள் கொடுக்கப்பட்டன. ஓப்பனான வாகனத்தில் வேலுமணி ஏற்றி விடப்பட்டார். கூடியிருந்தவர்களை பார்த்து அவரும் கையசைத்தார்.
அவர்கள் வேலுமணியை வாழ்த்தி கோஷம் போட்டனர்.

அதிமுக ஆட்சி தொடர நான் முக்கிய காரணம்
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய வேலுமணி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி தொடர்வதற்கும் கட்சி ஒற்றுமைக்கும் நான் ஒரு முக்கிய காரணம் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது 13 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், எனது, வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை.

நீதியரசர்கள்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள உள்ளேன். நான் அனைத்து மதத்தையும் மதிப்பவன், கடவுளை நம்புகிறவன். 30 வருடங்களுக்கும் மேலாக, சபரிமலை செல்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்பதால் அதிகம் பேச முடியாது. ஆனால், நான் நீதியரசர்களை நம்புகிறேன்.

திமுக வழக்கு
50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நான் 5 ஆண்டுகளில் கோவைக்கு பெற்று தந்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கழகம் ஒற்றுமையாக இருக்கவும், ஆட்சி தொடரவும் நான் ஒரு முக்கியமான காரணமாக இருந்தேன். இதையெல்லாம் மனதில் வைத்து தான் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு போடப்பட்டுள்ளது. இவ்வாறு வேலுமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications