அதிமுக ஆட்சி தான் தமிழகத்துக்கு பொற்காலம்.. திமுக அரசால் எந்த பயனுமே இல்லை.. எடப்பாடி விமர்சனம்
கோவை: தமிழகத்தில் 10 ஆண்டு நடந்த அதிமுகவின் ஆட்சி பொற்கால ஆட்சியாகும். இப்போது தமிழகத்தில் பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமிழகத்தில் நடப்பது ஒரு குடும்ப ஆட்சி. திமுக ஆட்சியால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என கோவை உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக தாக்கி பேசினார்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் கோவை மாவட்டத்துக்கு திமுக அரசு சார்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தாமல் திமுக அரசு புறக்கணிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குற்றம்சாட்டினார்.

கோவையில் உண்ணாவிரதம்
மேலும் திமுக அரசை கண்டித்து இன்று கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத பந்தல் அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்எல்ஏக்கள் உள்பட நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

பொம்மை முதல்வராக ஸ்டாலின்
இந்த உண்ணாவிரதத்தை முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்து பேசினார். இந்த வேளையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: திமுக ஆட்சியில் கோவை மட்டுமின்றி தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகிறது. இந்த காலத்தில் கோவை உள்பட தமிழகத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு திமுகவின் ஆட்சி உதாரணமாக உள்ளது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார்.

அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி
10 ஆண்டு அதிமுகவின் ஆட்சி தமிழகத்தில் பொற்காலமாக இருந்தது. அதிமுகவை எம்ஜிஆர் துவங்கினார். கட்சியை ஜெயலலிதா வளர்த்தார். கடந்த 10 ஆண்டுகால தொடர் ஆட்சியில் அதிமுகவில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எனது தலைமையிலான அரசு சிறப்பாக ஆட்சி செய்தது. கோவை மாநகருக்கு மட்டும் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கோவையில் 28 தடுப்பணைகள் கட்டப்பட்டன. விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கைவிடப்படும் திட்டங்கள்
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பற்றி திமுகவுக்கு தெரியவில்லை. கோவை மநகராட்சியில் உள்ள பல்வேறு பிரமாண்டமான பாலங்கள் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டன. தற்போதும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுக திறந்து வைத்து உரிமை கொண்டாடுகிறது. கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு கைவிட்டு வருகிறது. அதிமுக கொண்டு வந்த கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. அதிமுக அரசு கொண்டு வரப்பட்ட திட்டங்களை மக்கள் நலன்கருதி திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.'' என்றார்.












Click it and Unblock the Notifications