கோவை ஓட்டலில் புகுந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ இடமாற்றம்
கோவை: கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி ஓட்டலுக்குள் புகுந்து உதவி காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்கியதால் ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
Recommended Video
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளின்படி ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி ஓட்டல்கள், தேனீர் கடைகள், சினிமா தியேட்டர்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
அது போல் இரவு 11 மணி வரை மட்டுமே இக்கடைகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் ஸ்ரீ ராஜா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதாகவும், இரவு 11 மணி வரை செயல்படுவதாகவும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அதன் உரிமையாளர் கூறுகிறார்.
ஓட்டலில் நுழைந்த பயணிகள்
இந்நிலையில், நேற்று இரவு 10.20 மணிக்கு ஓசூரில் இருந்து வந்த பயணிகள் மிகவும் பசிக்கிறது என கூறியதை அடுத்து, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது, ஓட்டலின் ஷட்டரும் பாதி அளவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த காட்டூர் காவல் நிலைய எஸ்ஐ முத்து ஓட்டலின் உள்ளே நுழைந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கியுள்ளார்.
காவல் துறை ஆணையர் உத்தரவு
இதில், ஒரு பெண்ணுக்கு தலையிலும், ஒருவருக்கு கையில் என 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக, காவல்துறை ஆணையாளரிடம் ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் உதவி ஆணையர் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
எஸ் ஐ இடமாற்றம்
இந்த நிலையில் காட்டூர் எஸ்ஐ முத்து கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். ஓட்டலுக்குள் புகுந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வைரலாகி வருகின்றன.