எஸ்பி வேலுமணி ரகசிய ஆப்பரேசன்..! வலையில் சிக்கிய திமுக புள்ளிகள்! மேயர் தேர்தல் ட்விஸ்ட்!
கோயம்புத்தூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோவை வருகை கொங்கு மண்டலத்தில் திமுக நிர்வாகிகள் இடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கோவை மேயர் தேர்தல் விஷயத்தில் ரகசியமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கோவை மேயர் ரேஸ்! செந்தில் பாலாஜி என்ட்ரி..! வியூகத்தை மாற்றிய எஸ்பி வேலுமணி!
திமுகவிற்கு தர்மசங்கடம்
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய மாவட்டம் என்றால் அது கோவை தான். அங்குள்ள ஒரு தொகுதியில் கூட திமுகவோ, திமுக கூட்டணிக்கட்சியோ வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம் எஸ்பி வேலுமணியின் தேர்தல் வியூகம் தான் என்று அதிமுகவினர் அப்போது பெருமையாக பேசிக் கொண்டனர். இதனை அடுத்து தேர்தல் முடிந்த கையோடு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ராமச்சந்திரன், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் சக்கரபாணியை கோவை அனுப்பி கட்சி விவகாரங்களை கவனிக்குமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
பொறுப்பாளரான செந்தில் பாலாஜி
இதில் பெரிய அளவில் பலன் கிடைக்காத நிலையில் தான் அண்மையில் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். அப்போது முதல் தற்போது வரை கரூரை கூட மறந்து கோவையே கதி என செந்தில் பாலாஜி சுற்றி வருகிறார். முதல்வரின் கோவை விசிட்டிற்கு செந்தில் பாலாஜி தடல் புடல் ஏற்பாடுகளை செய்து அசத்தினார். இவை அனைத்திற்கும் ஒரே காரணம் கோவை மேயர் பதவி தான். சட்டப்பேரவை தேர்தலில் இழந்த கோவையை நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் ஒரே இலக்கு என்கிறார்கள்.
வேலுமணிக்கு நெருக்கடி
இதனால் தான் கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு வரும் செந்தில் பாலாஜியை அங்கு அனுப்ப வைத்துள்ளார் ஸ்டாலின். நேரடியாக தேர்தல் நடைபெற்றாலும் சரி, மறைமுகமாக நடைபெற்றாலும் சரி கோவை மேயர் திமுகவை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட். இதே போல் சட்டப்பேரவை தேர்தலில் கோவை அதிமுகவிற்கு கொடுத்த பெருமையை தக்க வைப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கோவை தனது கோட்டை என்பதை எஸ்பி வேலுமணி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
வேலுமணி சைலன்ட் ஆனது ஏன்?
இதனிடையே முதலமைச்சர் கோவை வரும் போதும் சரி, அதற்கு முன்பாக செந்தில் பாலாஜி அங்கு வந்து களப்பணியை தீவிரப்படுத்தும் போதும் சரி எஸ்பி வேலுமணி அமைதியாக இருந்து வருகிறார். இதற்கிடையே கோவை மேயர் தேர்தலை பொறுத்தவரை அதிமுகவினரிடையே பெரிய ஆர்வம் இல்லை என்றும் ஏற்கனவே மேயர் கனவில் இருந்த சிலர் கூட பின்வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இவை எதுவுமே உண்மை இல்லை என்கிறார்கள். செந்தில் பாலாஜி எப்படி நேரடியாக களம் இறங்கி திமுகவிற்காக பணியாற்றி வருகிறாரோ? அதே போல் வேலுமணியும் மறைமுகமாக பணியாற்றி வருவதாக கூறுகிறார்கள்
வேலுமணியால் வளைக்கப்பட்ட வாரிசுகள்
அதிலும் கோவை மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகளில் அதிருப்தியில் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களை ரகசியமாக எஸ்பி வேலுமணி பாக்கெட் செய்து வருவதாக சொல்கிறார்கள். அதிலும் கடந்த காலங்களில் திமுகவில் செல்வாக்கோடு இருந்துவிட்டு தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ள பலரின் வாரிசுகள் வேலுமணியின் வலையில் விழுந்துவிட்டதாக கூறுகிறார்கள். அவர்கள் யாரையும் நேரடியாக அதிமுகவிற்கு வருமாறு வேலுமணி அழைக்கவில்லை என்கிறார்கள். திமுகவின் அதிகாரப்பூர்வ மேயர் வேட்பாளர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகள் செய்யும் பணியை மட்டும் வேலுமணி கொடுத்து வருவதாக கூறுகிறார்கள்.
காய் நகர்த்தும் வேலுமணி
சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் இதே பாணியில் தான் வேலுமணி வென்றதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் கோவைக்கு செந்தில் பாலாஜி பொறுப்பாளராகியுள்ளதால் அதிருப்தியில் உள்ள லோக்கல் திமுக புள்ளிகளுடன் கை கோர்த்தால் கோவை மேயர் பதவியை வெல்வதுடன் கோவை அதிமுக கோட்டையாகவே தொடரும் என்று வியூகம் வகுத்து வேலுமணி காய் நகர்த்தி வருவதாக கூறுகிறார்கள்.