உடல் முழுவதும் ஓட்டை..ஜமேஷா முபின் மார்பை துளைத்த 2 இன்ச் ஆணி! கோவை கார் வெடிப்பு திட்டமிட்டது தானா?
கோவை : கோவை கார் குண்டுவெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் வெளியாகி உள்ள தகவல்கள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர் தாக்குதலுக்கு திட்டமிட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிறன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காரில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது யார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, எடிஜிபி தாமரைன் கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.
ஜமேஷா முபின்
விபத்து தொடர்பாக சென்னை தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். காரில் எரிந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆணிகள் கோலிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.
வலுவான ஆதாரம்
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதை அடுத்து என்ஐஏ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஜமேஷா முபின் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் உயிரிழந்த ஜமேஷா முபின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
ஜமேஷா முபின்
இதற்கிடையே ஜமேஷா முபினின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் குழுவால் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் ஜமேஷா முபினின் உடல் முழுவதும் சுமார் இரண்டு இன்ச் நீளம் உள்ள ஏராளமான ஆணிகள் துளைத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு ஆணி இடது பக்கம் மார்பிலும் மற்றொரு ஆணி முபினின் இதயத்திலும் துளைத்திருக்கிறது. இதன் காரணமாக இதயத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முபின் சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
திட்டமிட்ட தாக்குதல்
மேலும் அந்த விபத்தில் கார் வெடித்து சிதறிய போது முபினின் உடல் முழுவதுமாக கருகாமல் இருந்திருக்கிறது. இதன் மூலமாக காரை வெடிக்கச் செய்துவிட்டு ஜமேஷா முபின் அங்கிருந்து தப்பிக்க முயன்று இருக்கலாம் எனவும், ஆனால் காரில் இருந்த ஆணிகள் சிதறி அவர் உடலையும் மார்பையும் துளைத்ததில் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டமிட்டு தாக்குதலுக்கு தயாரானதாகவும் அதுவே அவரது உயிரையும் பறித்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.