திமுகவுக்கு நெருக்கடி.. கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரதம்.. துவக்கி வைத்த எடப்பாடி பழனிச்சாமி
கோவை: திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிமுக சார்பில் கோவையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. இந்நிலையில் தான் ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த பிரச்சனையால் அதிமுக மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அதிமுக தரப்பு மறுத்தது.

களமிறங்கிய அதிமுக
இந்நிலையில் தான் தற்போது அதிமுக சார்பில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வை கண்டித்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் சென்னை மற்றும் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ள பகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து போராட்டம்
மேலும் ஆளும் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தொடர்ந்து போராட்டங்கள் நடத்த அதிமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் மனதில் இடம்பிடிப்பதோடு, இது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும் கைக்கொடுக்கும் என அதிமுக நினைக்கிறது. அந்த வகையில் தான் சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சரான எஸ்பி வேலுமணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

உண்ணாவிரத போராட்டம்
அப்போது, ‛‛அதிமுக ஆட்சியில் கோவையில் சாலை, மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது எந்த பணிகளும் நடைபெறவில்லை. கோவைக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக அரசு கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கிறது. இதனை கண்டித்து டிசம்பர் 2ம் தேதி கோவையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்'' என கூறினார்.

துவக்கி வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி
அதன்படி இன்று காலை 11 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமை தாங்கினார். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று தொடங்கி வைத்தார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை விமர்சனம் செய்து பேசினார். மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக அரசில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதாக அவர் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications