பெரியார் உணவக தாக்குதல்.. இந்து முன்னணி - போலீஸ் “லிங்க்”! கூண்டோட மாத்துங்க -குண்டை போட்ட வன்னியரசு
கோவை: இந்து முன்னணியினரால் தந்தை பெரியார் என்ற பெயரில் திறக்கப்பட்ட உணவகம் தாக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் இந்து முன்னணியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் வன்னியரசு குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ளது கண்ணார்பாளையம் பகுதி. இங்குள்ள நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நேற்று திறந்தார்.
அப்போது, அங்கு சென்ற ஒரு கும்பல் பெரியார் உணவகத்தின் உரிமையாளர் பிரபாகரனை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அத்துடன் அந்த கும்பல் ஹோட்டலையும் அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.

கொலைவெறி தாக்குதல்
கடையில் இருந்த உரிமையாளர் பிரபாகரனை கடுமையாக தாக்கிய அந்த கும்பல், அங்கிருந்த கடை ஊழியர் அருண் என்பவர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். உரிமையாளர் மற்றும் ஊழியரை தாக்கிவிட்டு உணவகத்தை துவம்சம் செய்த அந்த ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த தாக்குதலில் உணவக ஊழியர் அருண் படுகாயமடைந்து காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

6 பேர் கைது
அருணுக்கு 36 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் பிரபாகரனும் காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ரவிபாரதி, சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகியோரை காரைமடை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்து முன்னணி
கைதான 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் அனைவரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைதானவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசியது, அத்துமீறியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 17
இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர் பிரபாகரன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அப்போது அவரிடம் வீடியோ எடுக்கும் நபர், "பெரியார் பெயர் வைத்ததால் தாக்கினார்கள். மீண்டும் அதே பெயரில் கடை திறப்பீர்களா?" என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், "இந்த கேள்வியை நீங்கள் கேட்கவே கூடாது. கண்டிப்பாக அதே இடத்தில்தான் நடத்துவேன். செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று கடை திறப்போம்." என்று கூறியுள்ளார்.

வன்னியரசு
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு, "கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி - சமூகவிரோதிகள் தொடர்ந்து ரவுடித்தனம் செய்து சமூகப் பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர். காவல்துறையில் பலர் இந்து முன்னணிக்கு ஆதரவான மனநிலையில் செயல்பட்டு வருகின்றனர். கூண்டோடு போலீசாரை மாற்ற வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications