''ராமர்கோவில் கட்ட தமிழக மக்கள் ரூ.120 கோடி நிதி தந்துள்ளனர்''.. கோவையில் யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
கோவை: பெண்களை மதிக்க தெரியாதவர்களுக்கு ஆட்சிக்கு வர உரிமை இல்லை என்று கோவையில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட யோகி ஆதித்யநாத் கூறினார்.
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அதற்குள் மக்கள் மனதில் பதிந்து விட வேண்டும் என்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் யோகி ஆதித்யநாத்
கோவை தெற்கு தொகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை எதிர்த்து பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கோவை தெற்கு தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் வானதி சீனிவாசனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை மதியம் கோவை வந்தார்.
சாமி தரிசனம் செய்தார்
விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, புலியகுளம் விநாயகர் கோயிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார். வானதி சீனிவாசனும் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து ஊர்வலமாகப் பிரச்சாரக் கூட்டம் நடக்கும் தேர்முட்டிப் பகுதிக்கு வந்தார் யோகி ஆதித்யநாத்.
மோடியின் பார்வை தமிழகத்தில் உள்ளது
பின்னர் வானதி சீனிவாசனை ஆதரித்து யோகி ஆதித்யநாத் பேசியதாவது:- தமிழக மக்கள் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது. பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். மோடியின் பார்வை முழுவதும் தமிழத்திலேயே உள்ளது.
தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது
பா.ஜ.க கூட்டணியை வெற்றி பெற செய்தால் மத்திய அரசின் நிநிதியும், திட்டங்களும் தமிழகத்துக்கு அதிக அளவில் கிடைக்கும். ஆனால் இங்கு எதிர் அணியில் உள்ள தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பெண்களையும், தாய் மார்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றன. பெண்களை மதிக்க தெரியாதவர்களுக்கு ஆட்சிக்கு வர உரிமை இல்லை என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.