கோவை இளைஞரின் 3 பவுன் தங்கம்.. சிங்காநல்லூர் போலீஸை தலை சுற்ற வைத்த குடும்பஸ்தன்
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர் தான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், இருகூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, 3 பேர் தன்னை வழிமறித்து 3 சவரன் தங்க நகையை வழிபறி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரை போலீசார் தீவிரமாக விசாரித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்றும் விசாரித்தனர். சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.அப்போது தான் பெரிய உண்மையை போலீசார் கண்டுபிடித்தனர்..
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். அவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் ஒன்றில், நான் இருகூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றேன். அப்போது என்னை 3 பேர் வழிமறித்து 3 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்ததாக இளைஞர் கூறிய இருகூருக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சிங்கநல்லூர் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நகை பறிப்பு காட்சி எதுவும் பதிவாக வில்லை. அங்கிருந்தவர்களும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லையே என்று கூயிருக்கிறார்கள்.
இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் அந்த இளைஞரை நேரில் அழைத்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர், தனது நிறுவனத்தில் இருந்து இருகூர் சென்ற போது கழுத்தில் பூச்சி ஒன்று விழுந்தது. உடனே கழுத்தை தடவி பார்த்த போது நகை இல்லை. அது வரும் வழியில் விழுந்து தொலைந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். அப்புறம் ஏன் பொய் புகார் தந்தாய் என்று கேட்ட போது, வீட்டில் கூறினால் கண்டிப்பார்கள். நகையை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டதாக புகார் அளித்தால் போலீசார் கண்டுபிடித்து தருவார்கள் என்று கருதி பொய் புகார் தந்ததாக போலீசாரிடம் இளைஞர் கூறினார்.
இதைத்தொடர்ந்து சிங்கநல்லூர் போலீசார் அந்த வாலிபரிடம் பொய் புகார் அளிக்க கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்.தங்க நகையை தொலைத்து விட்டு மர்ம நபர்கள் பறித்து விட்டதாக சிங்காநல்லூர் இளைஞர் ஒருவர் அண்மையில் புகார் அளித்தார். விசாரணையில் அவர் பொய் புகார் அளித்து நாடகமாடியது தெரிய வந்தது. எந்த சம்பவம் நடந்தாலும் உண்மையான தகவல்களையே புகாராக தெரிவிக்க வேண்டும். பொய்யான புகார் அளித்தால் போலீசாரின் வேலையையும் அந்த பொய் பாதிக்கும்.. அதேபோல் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிங்காநல்லூர் பகுதியில் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications