உள்ளே வந்துடாதீங்க.. சீனாவின் உளவு கப்பலுக்கு செக் வைத்த இலங்கை.. துறைமுக அதிகாரிகள் அதிரடி
கொழும்பு: "இலங்கை கடற்பரப்பில் இருந்தாலும் எங்கள் அனுமதியில்லாமல் சீன ஆய்வு கப்பலால் இலங்கைக்குள் நுழைய முடியாது" என்று அம்பந்தோட்டை துறைமுக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சீனா ராணுவத்திற்குச் சொந்தமான யுவான் வாங் 5 உளவு கப்பல் அம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்புதலைக் கடந்த ஜூலை மாதமே இலங்கை அரசு அளித்திருந்தது. இந்தச் சூழலில் இந்தியா ஏவுகணை சோதனை குறித்த தரவுகளை சீன உளவு கப்பல் சேகரிக்கக் கூடும் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இதனால் சீன உளவு கப்பல் இலங்கை செல்வதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக உளவு கப்பலின் வருகையை காலவரையின்றி தாமதப்படுத்துமாறு சீனாவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்தது.இதனிடையே, நார்வே நாட்டை சேர்ந்த வணிக கடல்சார் புலனாய்வு நிறுவனம் ஒன்று,யுவான் வாங் 5 கப்பலின் நடமாட்டத்தைப் பதிவு செய்துள்ளது. அதில் இலங்கையிடம் இருந்து கோரிக்கை வந்த சமயத்தில் யுவான் வாங் 5 கப்பல் தனது பாதையில் இருந்து திரும்பி சீனாவை நோக்கிப் பயணித்துள்ளது. இருப்பினும்,அது சில மைல் தூரம் மட்டுமே யுவான் வாங் 5 கப்பல் அப்படி பயணித்திருக்கிறது. பிறகு மீண்டும் இலங்கையை நோக்கியே அந்த கப்பல் வந்துக் கொண்டிருப்பதாக நார்வே நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது.
இந்த சூழலில், இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்துக்கு அருகே சீன ஆய்வுக் கப்பல் நின்றுக் கொண்டிருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் அது அந்த துறைமுகத்துக்குள் நுழையலாம் என தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து இலங்கையிடம் மீண்டும் தனது எதிர்ப்பை இந்தியா பதிவு செய்தது. இந்நிலையில், இதுகுறித்து இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுக அதிகாரிகள் இன்று விளக்கம் அளித்துள்ளனர். அதில், "சீன ஆய்வுக் கப்பல் அம்பந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 மைல் தூரத்தில் இருக்கிறது. துறைமுகத்துக்குள் நுழைய அந்தக் கப்பலோ அல்லது சீனாவோ அனுமதி கோரவில்லை. எனவே எங்கள் அனுமதியில்லாமல் அம்பந்தோட்டை துறைமுகத்துக்கு சீன கப்பலால் நுழைய முடியாது" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை அரசு சீனாவிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளது. இருப்பினும், அதனை இலங்கையால் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதனால், அம்பந்தோட்டை துறைமுகத்தை இலங்கை 99 வருடக் குத்தகைக்கு சீனாவுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.