ஒரு நாளைக்கான பெட்ரோல்தான் இருக்கு.. இனி 15 மணி நேர மின்வெட்டு.. தியாகத்திற்கு தயாராகுங்கள்.. ரணில்
கொழும்பு: இலங்கையில் ஒரு நாளைக்கான பெட்ரோல் மட்டுமே கையிருப்பு உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவி ஏற்றார்.
இதையடுத்து ரணில் விக்கிரசிங்கே நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறுகையில் இலங்கைக்கான எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
’வெளியே போ ரணில்’..! மகிந்தாவைத் தொடர்ந்து ரணிலுக்கு எதிராக கிளம்பிய மக்கள்! என்ன காரணம் தெரியுமா!
டீசல் கப்பல்கள்
இந்திய உதவியின் கீழ் 2 டீசல் கப்பல்கள், 2 பெட்ரோல் கப்பல்கள் வர உள்ளன. இலங்கையின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. எரிவாயு சிலிண்டர்களை கொள்முதல் செய்ய 20 மில்லியன் அமெரிக்க டாலர் விரைவாக திரட்டப்படும்.
வரவு செலவு திட்டம்
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும். நாட்டை காப்பாற்ற மிகப் பெரிய சவாலை ஏற்றுள்ளேன். இலங்கையில் 14 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது கவலைதருகிறது. மிக மோசமான வருவாய் இழப்பால் இலங்கை விமான துறையை தனியார் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
45 பில்லியன் டாலர் நஷ்டம்
2021-ல் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 45 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணிக்காத மக்களும் கூட விமான சேவை நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையில் இனிவரும் மாதங்கள் மிக மோசமானதாக இருக்கும். ஆகையால் நாட்டின் பொதுமக்கள் அனைவரும் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்.
உயிரை பணயம்
என் உயிரை பணயம் வைத்தே தற்போதைய சவால்களை எதிர்கொள்கிறேன். எனக்கு நேரம் கொடுங்கள். மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் தினந்தோறும் மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணி நேரங்களாக மாறவும் இடமுண்டு. ஆனால் நாம் இதற்கு தேவையான நிதியை தேடிக்கொண்டுள்ளோம். நான் எனது கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும் என்றார்.