ஜாமீனுக்கு ரூ.1 கோடி கேட்ட நீதிபதி...அது போன மாசம்...இன்று 12 தமிழக மீனவர்கள் விடுவித்த இலங்கை
யாழ்ப்பாணம் சிறையிலுள்ள 12 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு: தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையிலிருந்த 12 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுதலை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 12 பேரும் ஜாமீனில் செல்ல விரும்பினால் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என கடந்த மாதம் நீதிபதி கூறிய நிலையில் இன்றைய தினம் மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த மாதம் 24-ம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்தனர்.
மேலும், அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 7ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து, சிறைக் காவல் முடிந்து மீண்டும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 12 மீனவர்களை மே 12ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மீனவர்கள் ஜாமீனில் செல்ல வேண்டுமென்றால் ஒரு மீனவருக்கு தலா ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
Recommended Video
நீதிபதியின் இந்த உத்தரவு சர்ச்சையானது. இந்த நிலையில் இலங்கையில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பசி பட்டினியால் பலர் தவிக்கின்றனர். ஆளும் அதிபருக்கு எதிராகவும் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராகவும் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கையே போர்க்களமாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் இன்றைய தினம் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.