உணவுப் பொருட்களுக்குப் பஞ்சம்.. இலங்கையில் பொருளாதார அவசர நிலை பிரகடனம்.. நாடாளுமன்றம் ஒப்புதல்!
கொழும்பு: இலங்கையில் உணவு பொருட்களின் விலையுயர்வை கட்டுப்படுத்தவும் அவற்றை பதுக்கி வைப்பதை தடுக்கவும் அதிபரால் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் சிக்கலில் இருந்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் முக்கிய வருவாயான சுற்றுலாத் துறை முடக்கம் போன்றவற்றால் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனால் அன்னியச் செலாவணி இருப்பானது குறைந்துவிட்டது. மேலும் இலங்கையின் ரூபாய் மதிப்பும் வெகுவாக சரிந்துவிட்டது. இனால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பதுக்கல் அதிகரிப்பு
இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப் பொருட்கள உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உணவு பொருட்களின் பதுக்கலை தடுக்கவும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை கடந்த 30ஆம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார்.

சர்க்கரை
இதன் மூலம் அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் கமிஷ்னராக அரசு நியமித்துள்ளது.

சில்லறை வர்த்தகர்கள்
வியாபாரிகள், சில்லறை வர்த்தகர்கள் பதுக்கும் உணவு பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி இறக்குமதி
மேலும் அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசி இறக்குமதிக்கு அன்னியச் செலாவணியை பயன்படுத்தும் வகையில் எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும்படி வாகன ஓட்டிகளை இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில கேட்டுக் கொண்டார். ஒரு வேளை பயன்பாடு குறையவில்லை என்றால் அதன் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர நிலை பிரகடனம்
இந்த நிலையில் அதிபர் பிறப்பித்த அவசரநிலை பிரகடனத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவசர நிலை தேவையில்லை என்றும் அத்தியாவசிய பொருட்களை காக்க மற்ற சட்டங்களை பயன்படுத்தலாம் என்றும் இது போன்ற அவசர நிலையால் மேலும் தவறுகள் நடக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

132 வாக்குகள்
இலங்கை அரசியலமைப்பை பொருத்தமட்டில் எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் அது 14 நாட்களுக்குள் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தால் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதையடுத்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவசர நிலை பிரகடனத்திற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து அவசர நிலை பிரகடனத்தை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆப்கான் நிலையும் இப்படியே
இரு மார்க்சிஸ்ட் கிளச்சிகள் மற்றும் பல ஆண்டுகளாக தொடரும் உள்நாட்டு போர் ஆகியவற்றால் இலங்கை கடந்த 50 ஆண்டுகளாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. இதே போல் ஆப்கானிஸ்தானிலும் உணவு பொருட்கள் விலையேற்றம் வேறு வழியில் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் கடந்த மாதம் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர்.

நாட்டை விட்டு ஓடிய ஆப்கன் அதிபர்
அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். அந்த நாட்டில் உள்ள அமெரிக்க படைகளும் வெளியேறியுள்ளன. தலிபான்கள் ஆட்சியை காரணம் காட்டி அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் எல்லையில் உணவு பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கும் உணவுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பால் உள்ளிட்ட பொருட்களின் விலையும் பல மடங்கு ஏற்றியே விற்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த நாட்டு மக்கள் நடந்தே அண்டைய நாடுகளுக்கு சென்று தஞ்சமடைகிறார்கள்.












Click it and Unblock the Notifications