இலங்கை:குழம்பிய குட்டையில் ஜரூராக மீன்பிடிக்கும் சீனா-அடுத்த பிரதமராகும் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு!
கொழும்பு: இலங்கையில் அதிஉச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவராக கருதப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவை இலங்கைக்கான சீனாவின் தூதர் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த நாடு பற்றி எரிகிறது. தென்னிலங்கை, வட இலங்கை என அனைத்து நிலமும் போர்க்களமாக உருமாறிக் கிடக்கிறது. தலைநகர் கொழும்பில் ஒரு மாத காலமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய கோரி போராட்டங்கள் தொடருகின்றன.
இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அத்துடன் தலைநகர் கொழும்பைவிட்டு தப்பி ஓடி திருகோணமலை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே பதுங்கி இருக்கிறார். இதனை இலங்கையின் பாதுகாப்பு செயலகமும் உறுதி செய்திருக்கிறது.
முன்னதாக மகிந்த ராஜபக்சே வன்முறையை ஏவிவிட்டார். இதனால் போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த மகிந்த ராஜபக்சே ஆதரவு அரசியல்வாதிகளுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். இலங்கை முழுவதும் 100க்கும் மேற்பட்ட ராஜபக்சே ஆதரவாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இத்தகைய இலங்கையின் அதி உச்ச அரசியல் குழப்ப நிலையில் புதிய அரசாங்கம் ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராகக் கொண்டு அமையலாம் என கூறப்படுகிறது. இப்பின்னணியில் இன்று திடீரென இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென் ஹொங்கும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது சீனத் தூதரிடம் சஜித் பிரேமதாச கூறியதாவது: இக்கட்டான நிலையில் இலங்கைக்கு சகோதரத்துவக் கரத்தினை சீனா நீட்ட வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் நாட்டை நிர்வகித்தல், லஞ்சம், ஊழல், அடக்குமுறைகளை ஒழிப்பது என்பனவே எனது நிர்வாகத்தில் முதன்மையானதாக இருக்கும். இலங்கையின் தற்போதைய நிலையில் இருந்து மீள்வதற்கு சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது. இவ்வாறு சஜித் பிரேமதாச கூறினார்.
இலங்கை: அரசுக்கு எதிரான கொழும்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர களமிறங்கும் ராணுவம்?