மருந்துகள் இல்லை! ஒருநாளுக்கு 10 மணிநேரம் மின்வெட்டு! பொருளாதார நெருக்கடி துன்பத்தில் இலங்கை
கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பகல் முழுவதும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டருக்காக கால்கடுக்க வரிசையில் காத்திருந்து மயங்கி விழும் பொதுமக்கள் தினமும் 10 மணிநேர மின்வெட்டால் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மருந்து, மாத்திரைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் என்பது தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா துறையை நம்பியே உள்ளது. ஆனால் கொரோனா பரவிய காலக்கட்டத்தில் இந்த 2 தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அடேங்கப்பா! இந்தியாவில் கடந்த 5 ஆண்டில் மட்டும் இத்தனை சாதி, மத கலவரங்களா? அதிர வைத்த புள்ளி விவரம்!
இதனால் இலங்கையின் பொருளாதாரம் சரிவை கண்டது. இதை ஈடுசெய்ய இலங்கை கடன் வாங்கியது. இதற்கிடையே அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது. பிற நாடுகளின் கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்தது. இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இந்தியா உள்பட சில நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகின்றன.
மருந்து, மாத்திரைக்கு தட்டுப்பாடு
இருப்பினும் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடி குறையவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை எகிறியுள்ளது. இதற்கிடையே இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகள் முதல் சிமெண்ட் வரை அனைத்துக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலருக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்கவில்லை. இன்னும் சிலர் அதிக விலை கொடுத்து மருந்து, மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
கால்கடுக்க நிற்கும் மக்கள்
மேலும் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் பெற்று கொள்ள விடியற்காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்து கிடக்கின்றனர். வெயில் கொளுத்தும் நிலையில் சிலர் மயங்கி சுருண்டு விழுகின்றனர். சமீபத்தில் பெட்ரோல் பங்க்கில் வரிசையில் நின்றபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் மண்ணெண்ணெய் வாங்கி சமையல் செய்யலாம் என நினைப்பவர்களுக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஏனெனில் மண்ணெண்ணெய்க்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுள்ளதால் பலர் பசி, பட்டினியில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மயங்கி விழுகின்றனர்
இதுகுறித்து கொழும்புவில் வசிக்கும் குடும்ப தலைவி சகாயராணி கூறுகையில், ‛‛நான் கடந்த 5 மணிநேரமாக மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருக்கிறேன். என்னுடன் வரிசையில் நின்று மயங்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனது கணவரும், மகனும் வேலைக்கு சென்றுள்ளதால் சுட்டெரிக்கும் சூரியனுக்கு மத்தியில் வரிசையில் காத்து கிடக்கிறேன். அதிகாலையிலேயே வந்ததால் நான் இன்னும் சாப்பிடவில்லை. எனக்கும் பயமாக உள்ளது. இருப்பினும் என்ன செய்ய. இது மிகவும் கடினமாக காலமாக உள்ளது'' என்றார்.
பிச்சை எடுக்கும் நிலை
பொருளாதார நெருக்கடி குறித்து வீட்டு வேலை செய்து வரும் வடிவு கூறுகையில், ‛‛நான் 60 ஆண்டுகளாக கொழும்பில் வசிக்கிறேன், இதுபோன்ற மோசமான சூழ்நிலையை நான் பார்த்தது இல்லை. எங்களுக்கு சாப்பிடவும், குடிக்கவும் எதுவும் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் சொகுசாக வாழ்கின்றனர். நாங்கள் தெருவில் பிச்சை எடுக்கிறோம்'' என விரக்தியை வெளிப்படுத்தினார்.
அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் இலங்கை தலைநகர் கொழும்பு முழுவதும் தினக்கூலிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் இயங்காமல் அணிவகுத்து நிற்கின்றன. பொருளாதார நெருக்கடி, சில உபகரணங்கள் தட்டுப்பாட்டால் சில மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காகித தட்டுப்பாட்டால் பள்ளிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
10 மணிநேரம் மின்தட்டுப்பாடு
மேலும் இலங்கையில் தினமும் 10 மணிநேரம் மின்தட்டுப்பாடு அமலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிலோன் மின்வாரியம் கூறுகையில், ‛‛எரிபொருள் பற்றாக்குறை மற்றும் ஜெனரேட்டர்கள் வசதி இல்லை. இதற்கிடையே போதிய மின் உற்பத்தியும் இல்லை. இதனால் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்'' என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் நீடிக்கும் மின்வெட்டுகளால் மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவை கடக்கின்றனர். மின்சாரம் இல்லாததால் இரவில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்படுவது இல்லை.
சரிவின் துவக்கம் எப்போது
இலங்கையில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தாலும் 2009க்கு பிறகு நாடு மெல்ல மெல்ல மீண்டது. தற்போது சில ஆண்டுகளாக மீண்டும் இலங்கை மோசமான நிலையை சந்திக்க துவங்கி உள்ளது. குறிப்பாக 2016ல் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டனர். அதன்பின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஈஸ்டர் தினத்தன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 279 பேர் இறந்தனர். இந்த தாக்குதல் வெளிநாட்டு பயணிகளின் இலங்கை வருகையை வெகுவாக குறைத்தது.
கொரேனாவால் மோசமான நிலை
அதன்பிறகு கொரேனா வைரஸ் பரவல் துவங்கியது. இது இலங்கையை மேலும் முடக்கி போட்டது. இலங்கையின் சுற்றுலா வருமானத்துக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்தது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கையில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதும் குறைந்துபோனது. இவை இரண்டும் தான் இலங்கை மேற்கொள்ளும் இறக்குமதி மற்றும் 51 பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதற்கான முக்கிய ஆதாரமாக இருந்தன. இதனால் இலங்கை இக்கட்டில் சிக்கியது.
அரசின் தவறான முடிவுகள்
இதுபற்றி கொழும்பை தலைமையிடமாக கொண்ட அட்வோகாடா இன்ஸ்ட்டியூட் குழு தலைவர் முர்தாசா ஜாபர்ஜி கூறுகையில், ‛‛இலங்கை அரசின் தவறான நிர்வாகம் தான் பொருளாதார சிக்கலுக்கு முக்கிய காரணம். பல ஆண்டுகளாக நீடித்த வரவு செலவு திட்டப் பற்றாக்குறைகள், அரசாங்க வருவாயை வீழ்ச்சியடைய செய்த கொரோனா பரவலுக்கு முன்பே தவறான வகையில் வரிக் குறைப்புக்கள் மற்றும் மின்சாரம் மற்றும் பிற பயன்பாடுகளுக்கான மானியங்கள் அறிவிக்கப்பட்டது. மேலும் கொழும்பில் தாமரை வடிவ வானளாவிய கட்டிடம் உட்பட வெள்ளை யானை திட்டங்கள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அரசு வீணடித்தது. மோசமான கொள்கை முடிவுகளே பிரச்சனைகளை அதிகப்படுத்தியுள்ளன.
மோசமான நிலைமை வரலாம்
கடந்த ஆண்டு அதிகாரிகள், இலங்கை உலகின் முதல் முழுமையான இயற்கை விவசாய நாடாக மாறும் என்று அறிவித்ததுடன், ஒரே இரவில் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களை தடை செய்தது. இதையடுத்து விவசாயிகள் விவசாயம் செய்யாத நிலையில் உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன. இலங்கை இப்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கலாம் என்பதால் மக்கள் இன்னும் மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்'' என்றார்.
கோத்தபய ராஜபக்சே மீது கோபம்
தமிழ் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரை மிருகத்தனமான முறையில் முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக ஒரு காலத்தில் நாட்டின் பெரும்பான்மையான சிங்கள மக்களால் விரும்பப்பட்ட கோத்தபய ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஆட்சியின் மீது தற்போது இலங்கை மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் அடிக்கடி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை அதிபரின் அலுவலகத்தை சூறையாட முயன்றனர்.
டீ கூட போட முடியவில்லை
இதுபற்றி இடதுசாரி கூட்டணியை சேர்ந்த இன்ஜினியரீங் மாணவர் முகமது அப்கர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இவர் கூறுகையில், "அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் தவிக்கிறோம். வீட்டில் டீ கூட தயாரிக்க முடியாது. எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. தற்போதைய நிலை மாற வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒருங்கிணைந்து போராடி வருகிறோம்'' என்றார்.
Recommended Video
முந்தைய பிரச்சனைகள்
இலங்கையின் 22 மில்லியன் மக்களில் பலர் வறுமையை சந்திப்பதில் புதியவர்கள் அல்ல. ஏனென்றால் 1970ல் நிலவிய உலகளாவிய எண்ணெய் நெருக்கடியின்போது சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் பெற்ற அனுபவம் கொண்டவர்கள் தான். இருப்பினும் இலங்கை சுதந்திரம் அடைந்த 1948ல் இருந்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக இது என அந்நாட்டு அரசே ஒப்புக்கொள்கிறது. இந்நிலையில் தான் குறைந்தபட்ச அளவில் மட்டுமே ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.