உள்ளே புகுந்த ராணுவம்.. அதிகாலையில் துரத்தப்பட்ட போராட்டக்காரர்கள்.. இலங்கையில் பரபரப்பு
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு எதிரே போராட்டம் நடத்தியவர்களை அதிகாலை வேளையில் ராணுவம் வலுக்கட்டாயமாக அப்பகுதியிலிருந்து வெளியேற்றியுள்ளது.
புதிய அதிபருக்கு எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நிதி நெருக்கடி
இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எரிபொருள், உணவு பொருள் என அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதிபர் மாளிகை, ஜனாதிபதி அலுவலகம் என பல முக்கிய அரசு கட்டிடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். நாட்டின் நிதிநிலைமையை தவறாக கையாண்டதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீது மக்கள் பெரும் கோபம் கொண்டிருந்தனர்.

புதிய அதிபர்
இதனையடுத்து கடந்த 13ம் தேதி ராஜபக்ச நாட்டை விட்டு சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். பின்னர் அங்கிருந்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதையடுத்து கடந்த 15ம் தேதி ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 20ம் தேதி நாடாளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதில் ரணில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றபோதே போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

போராட்டம்
ஆனாலும் புதிய அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவம் அதிகாலை வேளையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது. மட்டுமல்லாது போராட்டக்காரர்களின் குடில்களையும் ராணுவத்தினர் கலைத்தெறிந்துள்ளனர்.
அதிகாலை வேளையில் திடீரென கையில் ஆயுதங்களுடன் புகுந்த ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நிராயுதபாணியான போராட்டக்காரர்களை அகற்ற ராணுவத்தினர் ஆட்டோமேட்டிக் ரைபில் ரக துப்பாக்கிகளையும், லத்திகளையும் பயன்படுத்தியதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராணுவ தாக்குதல்
போராட்டத்தை ஒருங்கிணைத்த தொழிற்சங்கத் தலைவர் பசந்த சமரசிங்க, "நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை" என்று கூறியுள்ளார். போராட்டக்காரர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் கவலை தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களை இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்றும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video

எதிர்க்கட்சிகள் கண்டனம்
ராணுவ நடவடிக்கையில் பிபிசி ஊடகவியலாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். ராணுவத்தினர் ஊடகவியலாளரை எட்டி உதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். இது போன்ற மனிதாபிமானமற்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கையின் வருவாயில் சுற்றுலாத்துறை கணிசமான பங்காற்றி வரும் நிலையில் சர்வதேச ஊடகவியலாளரை தாக்குவதுதான் சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்காக அரசு கையாண்டுள்ள புதுமையான கொள்கையா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications