16 வயசுதான்.. சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. பாஜக அமைச்சர் மகனுக்கு தொடர்பு? பரபரக்கும் திரிபுரா
அகர்தலா: திரிபுராவில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில பாஜக அரசின் அமைச்சரின் மகன் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த விவகாரத்தில் அமைச்சரின் மகனை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்த பிரச்னை தற்போது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் இந்துக்களே இல்லாத நிலை உருவாகும் ஆபத்து .! மத்திய அரசை எச்சரிக்கும் ஃபரூக் அப்துல்லா
கூட்டு பாலியல் பலாத்காரம்
திரிபுரா மாநிலத்தின் உனகோடி மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "கடந்த 19ம் தேதியன்று ஓட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டிக்கு சிறுமியுடன் இளம்பெண் ஒருவர் வந்திருந்தார். அப்போது சிறுமியை மட்டும் சிலர் தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு குடிக்க குளிர்பானம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் என்ன கலந்திருந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
கைது
பின்னர் அங்கிருந்த கயவர்கள் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார். பின்னர் காவல்துறையி8ல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் அடுத்த நாள்(அக்.20) 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விகாரத்தில் மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது" என திரிபுரா காவல்துறை உதவி ஆய்வாளர் ஜோதிஷ்மன் தாஸ் சவுத்ரி கூறியுள்ளார்.
காங்கிரஸ்
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த வழக்கில் அமைச்சரின் மகன் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ஆஷிஷ் குமார் சாஹா, "கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தில் அமைச்சரின் மகனுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால் இது குறித்து முதலமைச்சர் மௌனம் காக்கிறார். அமைச்சரின் மகன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.
சிபிஎஎம்
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. எதிர்க் கட்சிகள் மீதான அரசியல் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பெண்கள் மீதான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரம், கூட்டு பாலியல் பலாத்காரம் ஆகிய பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. மேலும், இந்த சம்பவங்களில் அரசில் கட்சி தலைவர்கள், அவர்களது உறவினர்கள் ஆகியோரும் நேரடியாகவே ஈடுபட்டுள்ளனர்" என்று விமர்சித்துள்ளார்.
மறுப்பு
ஆனால் பாஜக இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. வழக்கில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆளும் கட்சியின் செல்வாக்கை சரிக்க இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்த சுஷாந்தா சவுத்ரி, "இதற்கு முன்னர் இருந்த இடது ஜனநாயக முன்னணி அரசு போன்று நாங்கள் இல்லை. மக்களுக்கு மின்சாரம், வீடு, குடிநீர் ஆகியவற்றை முறையாக விநியோகிக்கின்றோம். எனவே எங்கள் மீது தேவையின்றி பழி சுமத்துகிறார்கள்" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இம்மாநிலத்தில் மற்றொரு பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.