அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் காலமானார்.. ஜெயலலிதா ஆட்சியில் 'பால்வளத்துறை' !
கடலூர் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் (76) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தனன்.
கடலூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனின் மறைவுக்கு கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பின்னர் மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தனன். அந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 57 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜனார்த்தனனுக்கு 2 ஆண்டு சிறையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டில் நடைபெற்றபோது ஜனார்த்தனனின் விவசாய சொத்துக்கள் மூலம் கிடைத்த வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என்று கூறி கடலூர் நீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி ரத்து செய்தார்.
அதே போல அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் சொத்துக்கள் முடக்க விதிக்கப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து ஜனார்த்தனன் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.