"யார்கிட்ட கணக்கு கேட்கிற".. பண்ருட்டி கிராம சபை கூட்டத்தில் அடிதடி.. பாதியில் முடிந்ததால் பரபரப்பு!
கடலூர்: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வரவு செலவு கணக்கு கேட்கப்பட்டதால் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் கிராம சபை கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, காந்தி ஜெயந்தியான இன்று, தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த கிராம சபைக் கூட்டங்கள், காலை 11 மணிக்கு நடைபெறவேண்டும் என்றும், ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையை பின்பற்றி கூட்டம் நடத்தப்படவேண்டும் எனவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.
மேலும், கிராம சபை கூட்டங்களில், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கலாம் எனவும் அரசு சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபைக் கூட்டங்கள் இன்று கூட்டப்பட்டன. ஒரு சில இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில், மோதல் போக்கும், கைகலப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன,
சட்டையை பிடித்து கிழித்து.. சேரை வீசி.. திமுக - அதிமுக மோதல்.. கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
அந்த வகையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வரவு செலவு கணக்கு கேட்கப்பட்டதால் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம் கோட்லாம்பாக்கம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம், திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலர் முருகன் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது 2 வது வார்டு உறுப்பினர் தேமுதிக கட்சியை சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் த.வா.க கட்சியைச் சேர்ந்த துணை தலைவர் வசந்தியின் கணவர் வீரமணி ஆகியோரிடையே வரவு செலவு கணக்கு கேட்பதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டதால், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.