மாமன் மகனிடம் போனில் பேசிவிட்டு.. ஓடும் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை..கடலூரில் சோகம்
கடலூர்: கடலூர் சிதம்பரம் அருகே ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமா பையனை திருமணம் செய்து வைக்க காலதாமதம் செய்ததால் விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம் படுகை என்ற ஊர் உள்ளது. வல்லம்படுகை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேச மூர்த்தி என்ற செல்வம்.
இவரது மகள் கிருத்திகா கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
மாமா மகனை காதலித்துள்ளார்
கிருத்திகாவுக்கு 19-வயது ஆவதாக சொல்லப்படுகிறது. கிருத்திகா தனது மாமா மகன் ஒருவரை 6 மாத காலமாக காதலித்து வந்தாராம். தனது மாமா மகனை உயிருக்கு உயிராய் காதலித்து வந்த கிருத்திகா, தனது பெற்றோரிடம் மாமா மகனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இருந்தாலும் கல்லூரி படிப்பை முடித்த பிறகே திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் திட்டவட்டமாக கிருத்திகாவிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை
ஆனாலும், கடந்த சில மாதங்களாவே திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கிருத்திகா வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால், பெற்றோர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், பெற்றோருடன் கோபித்துக்கொண்ட கிருத்திகா கடந்த 6 மாதங்களாக பேசாமல் இருந்து வந்தாராம். இந்த நிலையில், நேற்று சிதம்பரத்தில் உள்ள கணினி பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய கிருத்திகா தனது காதலனான மாமா மகனுக்கு போன் செய்து பேசியிருக்கிறார்.
ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
அப்போது தான் வீட்டிற்கு செல்லாமல் வல்லம் படுகை ரயில் நிலையத்தில் இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதனால் பதறிப்போன கிருத்திகாவின் மாமா மகன், அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு தகவல் சொல்லியிருக்கிறார். இதற்கு மத்தியில் சிதம்பரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்த கிருத்திகா, தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
விபரீத முடிவுக்கு என்ன காரணம்?
இந்த தகவல் அறிந்து வந்த சிதம்பரம் ரயில்வே போலீசார், கிருத்திகா உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமா மகனை உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கிருத்திகா வலியுறுத்தி வந்ததாகவும் ஆனால், படிப்பு முடிந்தவுடன் தான் திருமணம் செய்து வைக்கப்படும் என்று பெற்றோர்கள் கூறியதால் விரக்தி அடைந்த கிருத்திகா இத்தகைய விபரீத முடிவை எடுத்து இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் கூறுகின்றன. எனினும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.