கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் பலி.. அரசு மருத்துவமனையில் 49 வயது பெண் உயிரிழப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாவட்டத்தில் முதல் முறையாக 49 வயது பெண் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 14 போலீசார் உட்பட மொத்தம் 16 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா வைரசிற்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள லால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 49 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இதனிடையே இன்று அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் கடலூர் மாவட்டம் 5 வது இடத்தில் இருந்துவந்தாலும், இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லாத நிலையில், இன்று முதல் முறையாக கொரோனாவுக்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 306 பேருக்கு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி அரசு மருத்துவமனைகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 3,074 பேர் பல்வேறு மையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications