8 நாட்களாக மருத்துவமனையில் கிடக்கும் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல்.. தீவிர போலீஸ் பாதுகாப்பு!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் உயிரிழந்த மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனைக்கு பிறகும் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி இறந்துவிட்டார். இவரது உடலுக்கு கடந்த 14 ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இந்த பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த நாள் மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பரிசோதனை முடிவு
பின்னர் 16 ஆம் தேதி பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. எனினும் மாணவியின் உடலை பெற்றோர் வாங்கவில்லை. இந்த நிலையில் 17 ஆம் தேதி தனியார் பள்ளியில் கலவரம் நடந்தது. பள்ளியின் பேருந்துகள், உடைமைகள், தீவைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து 18ஆம் தேதி மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

4 மருத்துவர்கள்
இதையடுத்து 4 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி மறுபிரேத பரிசோதனை செய்ய 19 ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் தங்கள் தரப்பு மருத்துவரையும் அந்த பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை மேல்முறையீடு செய்தார்.

பிரேத பரிசோதனை
எனினும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மறுபிரேத பரிசோதனையில் பங்கேற்க முன்கூட்டியே மருத்துவமனையின் டீன் மாணவியின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பி வைத்தும் அவர்கள் வரவில்லை. இதையடுத்து மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.

மனு மீது விசாரணை
மாணவியின் தந்தை மனு மீது விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த நிலையில் தள்ளுபடியானது. இந்த நிலையில் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் உடலை பெற்றுச் செல்ல உத்தரவிடக் கோரி காவல் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 8 நாட்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கள்ளக்குறிச்சி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications