அதிகாரத்தில் இருக்கும் அண்ணாமலை இப்படி பேசுவது சரியா? கச்சத்தீவு விவகாரம் குறித்து சீமான் கேள்வி!
கடலூர்: கச்சத்தீவினை மீட்பது குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலங்கைக்கு கச்சத்தீவினால் எந்தவித பயனும் கிடையாது. கச்சத்தீவில் எந்த மனிதர்களும் வசிக்கவில்லை. கச்சத்தீவு நமக்கு தேவை.
ஏனென்றால் மீனவர்கள் அதுவரை சென்று வருவதற்கு அத்தியாவசியத் தேவையாக உள்ளது. ஆனால் மத்திய அரசு சார்பாக நாங்கள் பேசுவது சரியாக இருக்காது. கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் அழுத்தும் கொடுத்து வருகிறோம். அதனால் கச்சத்தீவு மீட்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் டாஸ்மாக் மூலம் மதுபானத்தை விற்பனை செய்வோரின் சொத்துகளை யார் பறிமுதல் செய்வது? அதிகாரத்தில் இருப்பவர்கள் மது தயாரிக்கும் சூழலில், அரசு இது போன்ற கூறியது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.
பிடிஆர் மீது காலணி வீச்சு- தரம் தாழ்ந்தது, வெட்க கேடானது- பாஜகவினர் மீது சீமான் கடும் அட்டாக்
அதேபோல் ஆந்திரா அரசு கொற்றலை ஆற்றில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது வரவேற்கதக்கது. ஆனால் அதானி துறைமுகம் கட்டுகிறேன் என பெரிய மதில் சுவர் எழுப்பி ஆற்றில் தண்ணீர் போகாமல் தடுத்ததை ஆய்வு செய்தீர்களா? முதலில் அதை செய்யாமல் கடிதம் எழுதி என்ன பயன் வரப்போகிறது? என்று விமர்சித்தார்.
தொடர்ந்து கச்சத்தீவு விவகாரம் குறித்து அண்ணாமலை பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், கச்சத்தீவினை மீட்க வேண்டும் என்று நாங்கள் தான் கூற வேண்டும். அண்ணாமலை முழு அதிகாரத்தில் இருந்துகொண்டு இவ்வாரு பேசுவது சரியாகாது. அவர் என்ன டப்பிங் ஆர்ட்டிஸ்டா? குரல் கொடுக்க வேண்டியது நாங்கள். அதனால் மீட்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமர்சித்தார்.