வெந்து தணியாத காங்கிரஸ்.. ஆர்எஸ்எஸ் கைகூலி! கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்யுங்க! கடலூரில் கலக போஸ்டர்
கடலூர்: காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல் பூதாகரம் எடுத்து இருக்கும் நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடலூரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த சில நாட்களுக்கு முன் 2024 மக்களவை தேர்தல் குறித்த முக்கியமான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ்.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
3வதும் பெண்ணா? ஸ்கேனில் தெரிந்த பாலினம்.. கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு! உயிரிழந்த கடலூர் பெண்
அடிதடி
அவர்களிடம் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அந்த போராட்டத்தில் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இது அடிதடியாகவும் வெடித்தது.
ரத்த காயம்
இந்த மோதலில் காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. ரத்த காயங்களுடன் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து சத்யமூர்த்தி பவனுக்கு சென்ற போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இந்த காட்சிகளும் செய்திகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூபி மனோகரன்
ரூபி மனோகரனே இந்த மோதலுக்கு ஒரே காரணம் என பலர் குற்றம்சாட்டினர். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. இதனால் அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கட்சி மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வற்புறுத்தி கையெழுத்து
அவர் வரும் 24 ஆம் தேதி நேரில் விளக்கம் அளிக்க காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து பேசிய ரூபி மனோகரன், 62 மாவட்டத் தலைவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து பெற்று உள்ளார்கள் என்று குற்றம்சாட்டி உள்ளார். மாநில பொறுளாளர் என்ற பதவியை மட்டும் தனக்கு அளித்துவிட்டு கணக்கு வழக்குகளை காட்டவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.
தொடரும் குற்றச்சாட்டுகள்
ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் தனது தரப்பு நியாயத்தை தெரிவிப்பேன் எனவும், கட்சித் தலைமையின் முடிவை ஏற்க தயாராக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை அடுக்கி வருகிறார்.
ஆர்.எஸ்.எஸ். கைகூலி
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக கடலூரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருக்கிறது. "தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை கெடுத்துவரும் ஊழல்வாதி, RSS யின் கைகூலி கே.எஸ்.அழகிரியே ராஜினாமா செய்" என்று குறிப்பிடப்பட்டு, கீழே "இவன், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த போஸ்டரால் கடலூர் காங்கிரஸில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.