நெய்வேலி நிலக்கரி சுரங்க லாரி மோதி ஒருவர் பலி.. 4 லாரிகளுக்கு தீ வைப்பு..பதற்றம்.. போலீசார் குவிப்பு
கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் ஏற்ற சென்ற லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நான்கு லாரிகளுக்கு தீ வைத்து எரித்தனர்.
இலங்கையை மிரட்டும் டெல்டா...இந்தியாவை விட 3 மடங்கு வீரியம்-ஒருநாள் கொரோனா மரணங்கள் 100ஐ தாண்டியது!
லாரிகள் அதிவேகமாக சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாம்பல் ஏற்றி சென்ற லாரி
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மேலக்குப்பம் கிராமத்தைச் கோவிந்தன். என்.எல்.சி.யில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் அருகிலுள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் இருந்து இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது என்.எல்.சி அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி கோவிந்தன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
4 லாரிகளுக்கு தீ வைப்பு
இதில் படுகாயம் அடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மேலகுப்பம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.உச்சக்கட்ட ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய லாரிக்கு தீ வைத்தனர். மேலும், ஆத்திரம் தணியாத மக்கள் அந்த லாரியை பின்தொடர்ந்து வந்த மூன்று லாரிக்கு தீ வைத்து எரித்தனர்.
கடும் பதற்றம்
தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 30 லாரிகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் கடும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று லாரிகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கோரிக்கை
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து அதிகளவு லாரிகள் சாம்பல் ஏற்றி செல்கின்றன. இவ்வாறு செல்லும் லாரிகள் மிகவும் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.