வடலூரில் ஏழு திரை விலக்கி ஒளிர்ந்த ஜோதி - அருட்பெருஞ்ஜோதி என முழக்கமிட்டு தரிசித்த பக்தர்கள்
வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151 ஆவது ஜோதி தரிசன விழா கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் படி இன்று காலை நடைபெற்றது.
கடலூர்: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வடலூர் சத்ய ஞான சபையில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசன விழா நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு தடையை மீறி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வெளியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.
வள்ளலார் ஜோதி வடிவத்தில் காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான்.
ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் தெரிவதைக் காணலாம்.
தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம்
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவியசத்தி சத்ய ஞான சபையில் 151ம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நேற்று காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டு துவங்கியது. தொடர்ந்து மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களிலும், காலை 10 மணிக்கு சத்திய ஞான சபையிலும் கொடி யேற்றம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. தடை உத்தரவை மீறி குவிந்த பக்தர்கள் ஏராளமானோர் அருட்பெருஞ்ஜோதி... அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை என முழக்கமிட்டு ஜோதியை தரிசனம் செய்தனர்.
தடையை மீறி குவிந்த பக்தர்கள்
இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி ஏராளமான பொதுமக்கள் ஜோதி தரிசனத்தை காண வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை முன்பு குவிந்திருந்தனர் அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் வெளியில் இருந்தே ஜோதி தரிசனம் காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டனர்.
ஆறு முறை ஜோதி தரிசனம்
இன்றைய தினம் காலை 10 மணி, பகல்1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி, நாளை காலை 5.30 மணி என ஆறு முறை 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தெய்வ நிலைய யூ டியூப் சேனல் மூலம் நேரலையில் இந்த ஜோதி தரிசனத்தை பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜோதியாக காட்சி தரும் இறைவன்
இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் கடந்த 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே 'பேருபதேசம்' என்று சொல்லப்படுகிறது. 1874ஆம் வருடம் தை மாதம் 19ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருள் வாழ்த்து வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது முதன்மைச் சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.
பூச நட்சத்திர நாள்
அன்று முதல் ஆண்டு தோறும் தைப்பூச நாளன்று வள்ளலார் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையைப் பலகணி வழியாகப் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. நாளைய தினம் காலையில் பக்தர்கள் ஜோதி தரிசனம் காண அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.