லாக்டவுனால் 4 மாநிலங்களில் 22% பேருக்கு வேலை பறிபோனது.. ஆண்களுக்கே அதிக இழப்பு.. ஆய்வில் தகவல்
டெல்லி: வட இந்தியாவின் 4 மாநிலங்களில், லாக்டவுனால், 22 சதவீத தொழிலாளர்கள் வேலை இழந்ததாகவும், 31 சதவீதம் பேர் பகுதி வேலையின்மையை எதிர்கொண்டதாகவும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் யுனிவர்சிட்டி பிசினஸ் ஸ்கூலின் (யுபிஎஸ்) வணிக மற்றும் பொருளாதார கொள்கை ஆராய்ச்சி குறித்த குழு பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பில் லாக்டவுனின் தாக்கங்களை பதிவு செய்ய ஆன்லைன் கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது.
சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழக வணிகப் பள்ளியைச் சேர்ந்த குல்விந்தர் சிங் மற்றும் குன்மலா சூரி மற்றும் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிர்வைர் சிங் ஆகிய மூன்று நிபுணர்கள் அடங்கிய குழு இந்த ஆய்வை நடத்தியது.
510 பதில்கள் பெறப்பட்டன. அந்த பகுப்பாய்வின் அடிப்படையில், மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் லாக்டவுன் 1.0 காலத்தில், வேலைவாய்ப்பின்மை பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாக்டவுன் காரணமாக, 22 சதவீத தொழிலாளர்கள் வேலை இழந்தனர், 31 சதவீதம் பேர் பகுதி வேலையின்மையை எதிர்கொள்ள நேரிட்டது, அதாவது அவர்கள் தொழில்களை விட்டு வெளியேற நேரிட்டது அல்லது ஒரு வேலையிலிருந்து வருமானத்தின் சரிவை சந்தித்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த பகுப்பாய்வில், கணக்கெடுக்கப்பட்ட மாநிலங்களில் நாடு தழுவிய லாக்டவுன் காலகட்டத்தில், 54 சதவீத தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முறைசாரா துறையில் அதிக தாக்கத்தை எடுத்துள்ளது. முறைசாரா துறையில் 80 சதவீத தொழிலாளர்கள் முழுமையான வேலையின்மையை எதிர்கொண்டனர்.
சென்னையில் லாக்டவுனை முழுமையாக அமல்படுத்த கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
19 சதவீதம் அளவுக்கு நகர்ப்புறங்களில் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், 30 சதவீத அளவுக்கு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நகர்ப்புறங்களில் பகுதி வேலையின்மை மிக அதிகமாக உள்ளது (32 சதவீதம்).
முறைசாரா துறையே வேலை இழப்புக்களால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று குல்விந்தர் சிங் கூறுகிறார். கவலைக்குரிய மற்றொரு விஷயம் என்னவென்றால், விவசாயிகள் மிக உயர்ந்த பகுதி வேலையின்மையை (38 சதவீதம்) எதிர்கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து சுயதொழில் செய்வோர் உள்ளனர்.
அரசுத் துறை 5 சதவீத தொழிலாளர்களின் வேலையின்மையை சந்தித்துள்ளது. வயது அதிகமுள்ள தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது இளம் வயது தொழிலாளர்கள் அதிகமாக, வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். முழு மற்றும் பகுதி வேலையின்மை ஆண் தொழிலாளர்களிடையே பெண்களை விட அதிகமாக உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.