உ.பி.யில் தேர்தல் வேறு வருதே.. பெரும் மோசடி.. 10,000 போலி வாக்காளர் ஐடி தயாரிப்பு.. சிக்கிய வாலிபர்
டெல்லி: உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை ஹேக் செய்து நூற்றுக்கணக்கான போலி வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கிய பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள நாகூர் நகரின் மச்சார்ஹெடி கிராமத்தைச் சேர்ந்த விபுல் சைனி என்பவர்தான் அந்த இளைஞர். இவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (பிசிஏ) பட்டம் பெற்றவராம். அவரது தந்தை ஒரு விவசாயி.
விபுல் சைனி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அர்மான் மாலிக் என்ற நபரின் வழிகாட்டுதல் படி, கடந்த 3 மாத காலத்தில் 10,000 க்கும் மேற்பட்ட போலி வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கியதை போலீசார் கண்டறிந்தனர்.

பணம் பெற்று நடந்த மோசடி
போலி வாக்காளர் அடையாள அட்டைக்கு ₹ 100 முதல் ₹ 200 வரை பணம் பெற்று தயாரித்து கொடுக்கப்பட்டதாக சஹரன்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் எஸ்.சன்னப்பா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதுவரை 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி கணக்கில் பணம்
சைனி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், அதில் 60 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பிறகு கணக்கு உடனடியாக முடக்கப்பட்டது. சைனியின் வீட்டிலிருந்து இரண்டு கணினிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் பணம் எங்கிருந்து வந்தது என்ற விவரங்களையும் மற்றும் மாலிக் பற்றிய கூடுதல் விவரங்களையும் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர் காவல்துறையினர்.

மேலே இருந்து வரும் அசைன்மென்ட்
மாலிக் ஒவ்வொரு நாளும் வேலை பற்றிய விவரங்களை அனுப்புவார், நான் அதை செய்வேன் என்று, விசாரணையின்போது, சைனி போலீசாரிடம் கூறியிருந்தார். எனவே இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைக்காக டெல்லியில் உள்ள அதிகாரிகள் சைனியை அங்கு அழைத்துச் செல்ல நீதிமன்றத்தின் அனுமதியை கோர திட்டமிட்டுள்ளார்கள். தேச விரோத அல்லது பயங்கரவாத சக்திகளுக்கு இதில் தொடர்பு இருக்க கூடும் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன.

அகிலேஷ் யாதவ் சந்தேகம்
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், இந்த மோசடிக்கு பின்னணியில் "மாநில பாதுகாப்பு" கிடைக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உபி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் டிஜிட்டல் திருட்டு மூலம் ஒரு இளைஞர் போலி வாக்காளர் அடையாள அட்டையை உருவாக்கிய செய்தி மிகவும் தீவிரமானது. இது போன்ற மோசடி மாநிலம் முழுக்க நடைபெறுகிறதா என்பதை அறிய முழு மாநிலத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தேர்தல் கமிஷனின் பாதுகாப்பு பற்றிய கேள்வி மட்டுமல்ல, கவுரவம் தொடர்பான கேள்வியாகும், என்று அவர் கூறினார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications