திபெத்தில் 15,000 ஆண்டுகள் புதைந்திருந்த மர்மம்..! பனிப்பாறையில் 28 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு
டெல்லி: திபெத் நாட்டில் உள்ள பனிப்பாறைகளில் சுமார் 15,000 ஆண்டுகள் உறைந்திருந்த 28 புதிய வகை வைரஸ் உட்பட 33 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா, இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது,
வைரசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இருப்பினும், புதிது புதிதாகத் தோன்றும் உருமாறிய கொரோனா வகைள் நிலைமையை மோசமாக்குகிறது.

28 புதிய வைரஸ்கள்
கொரோனா வைரசில் இருந்தே உலகம் இன்னும் மீளாத போது, திபெத் நாட்டில் உள்ள பனிப்பாறைகளில் சுமார் 15,000 ஆண்டுகள் உறைந்திருந்த 28 புதிய வகை வைரஸ் உட்பட 33 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புவி வெப்ப மயமாதல் காரணமாக திபெத்தியப் பனிப்பாறைகள் உருகத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு இந்த புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன

22 ஆயிரம் அடி உயரம்
இந்த வைரஸ்களை மரபணு வரிசைப்படுத்தும் போது காலப்போக்கில் பருவநிலை காரணமாக இந்த வைரஸ் எப்படி மாறியுள்ளது என்பதை என்பதைக் கண்டறிய முடியும். அதாவது வெவ்வேறு பருவநிலைகள் இந்த வைரஸ் மீது என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்டறிய முடியும். திபெத்தில் உள்ள குலியா பனிப்பாறையில் சுமார் 22,000 அடி உயரத்தில் இந்த வைரஸ் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது.

எங்குத் தோன்றியது
இந்த வைரஸ்கள் தாவரங்கள் அல்லது மண்ணில் தோன்றி இருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். எனவே, இந்த வைரசைத் தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு உட்படுத்தும்போது, கடந்த 15 ஆயிரம் ஆண்டுகளாக என்ன மாதிரியான சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்ற பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
Recommended Video

மக்கள் அச்சம்
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 33 வைரஸ்களில் 28 வைரஸ்கள் இதற்கு முன் மனிதர்களுக்கு பரிட்சியம் இல்லாதவை. ஏற்கனவே, இதேபோல பரிட்சியம் இல்லா கொரோனா வைரஸ் தான் கடந்த 1.5 ஆண்டுகளாக உலக நாடுகளுக்குத் தலைவலியாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 28 வைரஸ்களால் எதாவது ஆபத்து ஏற்படுமோ எனப் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

பாதிப்பு இல்லை
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண் அல்லது தாவரங்களில் இருந்த வைரஸ்கள், பனிப்பாறைகளில் அப்படியே உறைந்து செயலற்றதாக மாறிவிடும். இப்போது பனிப்பாறைகள் உருகும்போது, அவை மீண்டும் உயிர்பிக்கிறது. இவற்றை ஆய்வாளர்கள் உரிய முறையில் கையாளும்போது எவ்வித ஆபத்தும் ஏற்படாது. ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் தெற்கு மற்றும் வட துருவங்கள் தொடங்கி இமயமலை வரை உள்ள பனிப்பாறைகள் உருகத் தொடங்கியுள்ளன.

தெரிந்து கொள்ளலாம்
இதனால் பண்டைக் காலத்தில் உறைந்த செயலற்று போன வைரஸ்கள் எதிர்காலத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு விடுவிக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இதுபோன்ற பல ஆயிரம் ஆண்டுகள் உறைந்து இருக்கும் வைரஸ்களை ஆய்வு செய்யும்போது அவை ஒவ்வொரு பருவநிலையும் எப்படிக் கையாண்டது, அந்த வைரசில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன ஆகியவை குறித்துத் தெரிந்து கொள்ள முடியும். இந்த புதிய வைரஸ்கள் குறித்துப் பல கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வதன் மூலம் வரும் காலத்தில் கொரோனா போல திடீரென ஏற்படும் பாதிப்புகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.












Click it and Unblock the Notifications