நிலைமை இப்படியே போனால்.. இந்த 3 மாநிலங்கள்... ரொம்ப கஷ்டம்.. சுகாதார துறை எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 76% பதிவாகியுள்ளது.
5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் சூழ்நிலையில், மறுபுறம் கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசுகள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 40,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 188 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,59,558 பேர் இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்,
மகாராஷ்டிராவில் கொரோனா
குறிப்பாக மகாராஷ்டிரா கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 25, 681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் மும்பையில் மட்டும் புதிதாக 3,062 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 63% மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.
டாப் 5 மாநிலங்கள்
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளா (9%), பஞ்சாப் (5.5%), கர்நாடகா (4%), தமிழ்நாடு (2.5%) ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டில் புதிதாக கொரோனா உறுதி செய்யப்படுபவர்களில் ஐந்து பேரில் நான்கு பேர் இந்த ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதேபோல. மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி 17ஆம் தேதி முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தற்போதுவரை நாடு முழுவதும் உள்ள 4.20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது,
அதிகமாகும் கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகளும் ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். அதேபோல பஞ்சாப் மாநிலமும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தியுள்ளன.