பட்ஜெட்டில் ஆன்லைன் ரம்மி.. பயனர்கள் “ஷாக்”.. ஜெயித்த பணத்தில் 30% வரி! தாறுமாறாக உயர்த்திய நிர்மலா
ஆன்லைன் கேம்களில் வெற்றிபெறும் தொகைக்கான வரி உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்து உள்ள மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்து உள்ள மத்திய பட்ஜெட்டில் ஆன்லைன் கேம்களில் வெற்றிபெறும் தொகைக்கான வரி உயர்த்தப்பட்டு உள்ளது. நாட்டில் ஆன்லைன் கேம்களை பொறுத்தவரை பலரது தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட கேம்களே அதிக வருவாய் பெறும் நிலையில் அதற்கான வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று லோக் சபாவில் தாக்கல் செய்த 2023 - 2024 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்கள், சேவைகள், தொழில்களுக்கான வரிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.
அந்த வகையில் நாட்டில் மிகப்பெரும் பொருளாதாரம் ஈட்டும் துறையாக வளர்ந்து நிற்கும் ஆன்லைன் கேம்களின் மீதான வரியை நேற்றைய பட்ஜெட்டில் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
“ஷாக்” கொடுத்த நிர்மலா.. பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கான நிதி குறைப்பு! 6 ஆண்டுகளில் ரொம்ப கம்மி
ஆன்லைன் கேம் வரி
நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆன்லைன் கேம்களுக்கு பிடித்தம் செய்யப்படும் வரி வகிதத்தில் 2 மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார். அதன்படி ஆன்லைன் கேம் விளையாடி அதில் வெற்றிபெறும் தொகையில் 30% வரியாக பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார்.
உச்சவரம்பு விதி நீக்கம்
அதேபோல், இதற்கு முன் ஆன்லைன் ரம்மியில் வெற்றிபெறுபவர்களிடம் வரி வசூலிக்க ரூ.10,000 உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த விதியை நீக்குவதாக அவர் அறிவித்து உள்ளார். நிதியாண்டின் இறுதியில், கணக்கில் இருந்து பயனர் பணத்தை வரி பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
5 பில்லியன் டாலர் வருவாய்
இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் 5 பில்லியன் டாலர் வருவாயை இது அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 5ஜி அலைவரிசை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால் இந்த ஆண்டு இதன் வளர்ச்சி இன்னும் வேகம் எடுக்கும் என்று நம்பப்படுகிறது.
புதிய விதிகள்
இந்த நிலையில்தான் ஆன்லைன் கேமிங் மூலம் வெற்றிபெறும் தொகையில் 30% ஐ பிடித்தம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. அதே நேரம் ஆன்லைன் கேமிங் மூலம் எந்தவிதமான மோசடிகளும் முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்கவும், பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
மத்திய இணையமைச்சர் விளக்கம்
மத்திய எலக்டிரானிக் மற்றும் தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுபற்றி கூறுகையில், "ஆன்லைன் கேமிங்கில் பல்வேறு விதிகளை கொண்டு வந்துள்ளோம். நம்பகத்தன்மையான, பாதுகாப்பான சூழலை ஆன்லைன் கேமிங்கில் உருவாக்க அரசு கொண்டு வந்துள்ளது. அதில் திருத்தங்களும் செய்யப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்துவதற்கு முன் வெளிப்படையாக கருத்து கேட்கப்படும்." என்றார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் சூதாட்ட கேம்களை விளையாடி அதனால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த 40 க்கும் அதிகமானோர் தற்கொலை செய்துள்ளனர். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தெரிவிக்காததால் அந்த சட்டம் காலாவதியானது. இந்த சூழலில் இதற்கான வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.