வேலைவாய்ப்பு இல்லாத சோகம்.. 2020ம் ஆண்டில் நாடு முழுக்க 3,528 பேர் தற்கொலை: மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: 2020ம் ஆண்டில் மட்டும் வேலைவாய்ப்பில்லாமல் 3,528 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.
இந்தியாவில் தற்கொலை செய்தவர்களின் விவரங்களை ராஜ்யசபா உறுப்பினர் ஒருவர் கேட்டிருந்த நிலையில், இதற்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அவரது பதில் விபரம் வருமாறு:

வேலையின்றி தற்கொலை
தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரப்படி 2020ல் இந்தியாவில் 2020ல் மட்டும் வேலையின்றி 3548 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டில் குறிப்பாக கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் மட்டும் 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.

மாநிலம் வாரியாக
வேலையின்றி அதிக தற்கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 720 பேர் தற்கொலை செய்தனர். இதற்கு அடுத்த இடத்தில் 625 தற்கொலையுடன் மராட்டியம், 336 தற்கொலையுடன் தமிழ்நாடு, 234 தற்கொலையுடன் அசாம், 227 தற்கொலையுடன் உத்தர பிரதேச மாநிலம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கடன் செலுத்த முடியாதவர்கள்
மேலும் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த இயலாதது, நிறுவனங்கள் திவால் ஆன வகையில் 2018 முதல் 2020 வரை மொத்தம் 16,061 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில் 2018ல் 4,910, 2019ல் 5,908, 2020ல் 5213 பேர் தற்கொலை செய்திருந்தனர்.

7 ஆண்டில் எவ்வளவு
2014ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 7 ஆண்டில் பல்வேறு காரணங்களுக்காக 18,772 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி ஆண்டுக்கு சராசரியாக 2,681 உயிரை மாய்த்துள்ளனர். 2014க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி செய்த கடைசி 7 ஆண்டை ஒப்பிடும்போது இது அதிகமாகும். காங்கிரஸ் ஆட்சி செய்த 2007 முதல் 2014 வரை மொத்தம் 15,332 பேர் தற்கொலை செய்திருந்தனர். என அவரது பதிலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications