டெல்லியில் பயங்கரம்.. தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் மீது ஏறிய லாரி.. சாலையோரம் நடந்த கொடூரம்!
டெல்லி: டெல்லியில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்திற்கு காரணமாக லாரி மற்றும் அதன் ஓட்டுநரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அதிவேகம்
டெல்லியின் சீமாபுரி பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரியாக டெல்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) பேருந்து நிலையம் அருகே அதிகாலை 1.51 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. அதிவேகத்தில் தறிகெட்டு ஓடிய லாரி, சாலையின் டிவைடரில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியுள்ளது.

உயிரிழப்பு
இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 25 வயது மதிக்கத்தக்க சோட் கான் எனும் இளைஞனும் ஒருவர். மற்றவர்கள் கரீம் (52), ஷா ஆலம்(38) மற்றும் ராகு (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல மனீஷ் (16), பிரதீப் (30) என இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துள்ளார். இவரை தேட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்து எண்ணிக்கை
நாடு முழுவதும் கடந்த 2021ல் மட்டும், 4.03 லட்சம் விபத்துக்கள் நடந்துள்ளன. அதாவது நாளொன்றுக்கு 426 விபத்துக்கள். ஒரு மணி நேரத்திற்கு 18 விபத்துக்கள். இந்த விபத்துகளில் 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிரிழப்பைவிட காயமடைந்தவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். அதாவது 3.71 லட்சம் பேர் இந்த விபத்துக்களில் படுகாயமடைந்துள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான விபத்துக்கள் கவனக்குறைவு மற்றும் அதிவேகத்தால் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாகும் உயிரிழப்புகள்
பொதுவாக நாடு முழுவதும் ஏற்படும் விபத்துக்களில் மேற்குறிப்பிட்டதைப்போல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை விட காயமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், மிசோரம், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களில் காயமடைவோர்களைவிட உயிரிழப்பவர்களே அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications