நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் தேக்கம்!.. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்
டெல்லி : நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் விசாரணை என்ற நிலையில் தேங்கியுள்ளாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் அளித்த பதிலில், இம்மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 72 ஆயிரத்து 62 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 25ஆம் தேதி நிலவரப்படி 25 உயர்நீதிமன்றங்களில் 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 4 கோடியே 23 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சம் ஆகும். இது 5 கோடியை நெருங்கி வருகிறது.
நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் அரசுக்கு பங்கில்லை. வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராணுவ செலவு
இதனிடையே, லோக்சபாவில் கேள்வி நேரத்தில், கடந்த ஆண்டில் உலக அளவில் ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தில் இருப்பதாக கூறப்படுவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராணுவ இணை அமைச்சர் அஜய்பட், மற்ற நாடுகளில் ராணுவ செலவினம் குறித்த விவரங்கள் ராணுவ அமைச்சகத்திடம் இல்லை. இருப்பினும், சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தனது இணையதளத்தில், இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.
ராணுவத்திற்காக செலவு செய்வதில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. 80 ஆயிரத்து 67 கோடி டாலர் செலவு செய்யப்படுகிறது. இரண்டாம் இடத்தில் சீனா உள்ளது 29 ஆயிரத்து 335 கோடி டாலர் செலவிடப்படுகிறது. 3 வது இடத்தில் இந்தியா உள்ளது. 7 ஆயிரத்து 660 கோடி டாலர் செலவிடப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. 46 இடங்களில், ரேடார் நிலையங்கள் நிறுவி கடலோர பாதுகாப்பு கண்காணிக்கப்படுவதாக ராணுவ இணை அமைச்சர் அஜய்பட் தெரிவித்துள்ளார்.