அரசியல் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகல்.. "ஐபேக்" பிரஷாந்த் கிஷோர் பரபரப்பு முடிவு.. என்ன நடந்தது?
டெல்லி: அரசியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், வேறு சில பணிகளில் கவனம் செலுத்த போவதாகவும் பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐபேக்கை உருவாக்கியவர்களில் முக்கியமான நபர் பிரஷாந்த் கிஷோர். 2014ல் பிரதமர் மோடிக்கும், பாஜகவிற்கு அரசியல் வியூகங்களை வகுத்து கொடுத்த மாஸ்டர் மைண்ட்களில் இவரும் ஒருவர்.
அதன்பின் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பணியாற்றி நிதிஷ் குமாருடன் நெருக்கமாகி பின் அக்கட்சியிலும் இணைந்தார். அக்கட்சியின் துணை தலைவராக பிரஷாந்த் கிஷோர் பணியாற்றி வந்தார்.

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர் பல்வேறு கட்சிகளுக்கு கடந்த காலங்களில் தேர்தல் வியூகங்களை வகுத்து அக்கட்சிகளை வெற்றிபெற வைத்துள்ளார். பஞ்சாப்பில் காங்கிரசின் அமிரிந்தர் சிங், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி என்று பல மாநில முதல்வர்களின் வெற்றிக்கு பின் பிரஷாந்த் கிஷோர்தான் வியூகங்களை வகுத்தார்.

வியூகம்
உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது மட்டுமே பிகே டிராக் ரெக்கார்டில் ஒரே தோல்வியாகும். தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும் திமுக, திரிணாமுல் காங்கிரசின் வெற்றிக்கு இவர்தான் காரணமாக இருந்தார். இரண்டு கட்சிக்கும் இவரின் ஐபேக் நிறுவனம்தான் தேர்தல் ஆலோசனைகளை வழங்கி வியூகங்களை வகுத்தது.

முடிவு
இந்த நிலையில் திடீரென அரசியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், வேறு சில பணிகளில் கவனம் செலுத்த போவதாகவும் பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய அவர், இனியும் இந்த அரசியல் ஆலோசனைகளை செய்ய விரும்பவில்லை. இந்த தளத்தில் இருந்து வெளியேற நினைக்கிறேன்.

குடும்பம்
வேறு பணிகளை செய்ய விரும்புகிறேன். என் குடும்பத்தோடு நேரம் செலவிட விரும்புகிறேன். ஐபேக் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஐபேக்கை நடத்தட்டும். நான் இங்கிருந்து வெளியேறுகிறேன் என்று பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். இவர் அரசியல் கட்சியில் இணைய வாய்ப்புள்ளது, திரிணாமுல் காங்கிரசில் உறுப்பினராக வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகின்றன.

தகவல்
இதனால் அவர் அரசியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து வெளியேறுகிறார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. முன்னதாக பாஜக மேற்கு வங்கத்தில் 100 தொகுதிகளை தாண்டி வென்றால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று பிகே குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பாஜக 90 தொகுதிகளில் கூட மேற்கு வங்கத்தில் வெல்லாத நிலையில் பிகே இந்த பரபரப்பு முடிவை எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications