பேரிடியை இறக்கிய தேர்தல் முடிவுகள்.. நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?
Recommended Video
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது அக்கட்சியினரை அதிரச் செய்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜஸ்தான், தெலுங்கானா, மிஸோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இந்த 5 தொகுதிகளில் ராஜஸ்தான், ம.பி. சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அது போல் தெலுங்கானாவில் அந்த மாநில கட்சி வெற்றி பெற்றுள்ளது.
சந்தேகம்
தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட முதலே சில மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்காத நிலையில் இது அக்கட்சி நிர்வாகிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. இதைத் தொடர்ந்து சில மாநிலங்களில் பாஜகவுக்கு மேலே வந்தபோதிலும் எந்த மாநிலத்திலும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை அக்கட்சி பெறவில்லை. இந்நிலையில் இந்த பின்னடைவு நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்குமா என்ற சந்தேகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிணைந்து
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து அடுத்ததாக பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மற்ற மாநில, தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற உள்ளன.
3 அணி
இதற்காக ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியோ காங்கிரஸ்- பாஜக அல்லாத 3 அணியை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
பாஜக நிமிராது
இந்த சூழலில் 3-ஆவது அணி என்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. எனவே 5 தேர்தல் முடிவுகளை பார்த்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலை தூக்காத நிலை ஏற்படும் என்றே கருத தோன்றுகிறது.
தெரியாமல் இல்லை
இதற்கெல்லாம் காரணம் பாஜகவின் தவறான நிர்வாக போக்குதான் என்று கூறப்படுகிறது. பணமதிப்பிழப்பு விவகாரம் தொடங்கி நீட், பெட்ரோல் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வரை அனைத்திலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் வெளிப்பாடே இந்த தேர்தல் முடிவுகள் என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை.