வந்தாச்சு வந்தே பாரத் ரயில்.. சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே நவம்பர் 10 முதல் சீறிப்பாய்கிறது
டெல்லி: இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் நவம்பர் மாதம் 5ம் தேதி முதல் இயங்க உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி போக்குவரத்து துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டத்தில் ஒன்று தான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த நிலையில் நாட்டில் 75 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்.. நவ.10 முதல் பயணிக்கலாம்.. என்னென்ன வசதிகள்
4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்
அதன்படி இந்தியாவில் முதல் முறையாக டெல்லி - வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை கடந்த 2019ல் நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, குஜராத் தலைநகர் காந்திநகர் - மும்பை, உன்-டெல்லி இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை - மைசூர் இடையே ரயில்
இந்நிலையில் தான் நாட்டின் 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை - மைசூர் இடையே இந்த வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம்( நவம்பர்) 10ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி பச்சை கொடியசைத்து துவக்கி வைக்கலாம் என கூறப்படுகிறது.
பயண நேரம் குறையும்
இந்த ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் வழியாக மைசூரை சென்றடையும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் அதிவேகமாக இயங்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்த ரயிலின் பெட்டிகள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது. சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரிக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க கூடியதாக உள்ளன. இதன்மூலம் தற்போது சென்னை- மைசூர் இடையேயான பயண நேரம் என்பது குறையும்.
வசதிகள் என்ன?
டெல்லி - வாரணாசி, டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே இயங்கும் ரயில்களை காட்டிலும் தற்போதைய ரயில்கள் நவீன தொழில்நுட்ப வசதியுடன் தயாரிக்கப்படுகின்றனர். இதனால் இது வந்தே பாரத் 2.0 என அழைக்கப்படுகிறது. இந்த ரயிலில் எக்ஸிகியூட்டிவ் பெட்டிகளில் உள்ள இருக்கைககள் 180 டிகிரி அளவுக்கு சுழலும் வகையில் உள்ளது. சேர் கார் வசதி, கண்காணிப்பு கேமரா வசதி உள்ளது. மேலும் 400 மிமீ முதல் 650 மிமீ உயரம் வரை ரயில் பாதையில் தண்ணீர் இருந்தாலும் இந்த ரயில் பாதுகாப்பாக இயங்கும். இதுதவிர ஆட்டோமேட்டிக் கதவுகள், 34 இன்ச் எல்சிடி டிவி வசதிகள் உள்ளன.
தென் இந்தியாவில் முதல் ரயில்
மேலும் 2019ல் இந்தியாவில் முதல் முறையாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில்களை மக்கள் சேவைக்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கடந்த மாதம் 30ம் தேதி காந்திநகர் -மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயிலும், அதன்பிறகு அக்டோபர் 23ல் இமாச்சல் பிரதேசம் உனா - டெல்லி இடையே 4வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது நவம்பர் 10ல் சென்னை மைசூர் இடையே 5வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் தென் இந்தியாவில் முதல் முறையாக வந்தே பாரத் ரயில் சீறிப்பாய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.