தஞ்சை மாணவி தற்கொலை: நாடு முழுவதும் பாஜக மாணவர் அணியினர் போராட்டம் - மும்பையில் 60 பேர் கைது
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி வேண்டும் என்று கூறி பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் இன்று நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தது.
டெல்லி: தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதி வேண்டி, பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பு நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. மும்பையில் சியோன் சர்க்கிளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும், கிறிஸ்தவ அமைப்புக்குச் சொந்தமான பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் செய்ய சொன்னதுதான் காரணம் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது. மேலும் மாணவியின் மரணத்திற்கு நீதிக்கேட்டு பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. பள்ளியின் வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
மதமாற்றம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது என குற்றச்சாட்டு கிளம்பியதால், தமிழகம் முழுக்க பரபரப்பு காணப்பட்டது. இதுதொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மாணவி தற்கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணையில் தலையிடுவது முறையாகாது என்று கருத்து கூறியுள்ளது.

டெல்லியில் போராட்டம்
தமிழக மாணவி தற்கொலை மரணம் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மற்றும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் டெல்லி தமிழ்நாடு இல்லம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் போராட்டம்
இந்நிலையில், பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் தஞ்சை மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு இன்று நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தது. சென்னையில் நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட எபிவிபி அமைப்பின் தேசிய பொது செயலாளர் நிதி திரிபதி உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் பாஜக மாணவர் அமைப்பினர் கைது
இதனை கண்டித்தும் தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதி வேண்டியும், திரிபுரா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, அந்தமான் நிக்கோபர், காஷ்மீர், உத்தரப் பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் சியோன் சர்க்கிளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications