சீனாவுடனான கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் 76 ராணுவ வீரர்கள் படுகாயம்- மருத்துவமனையில் சிகிச்சை
டெல்லி: லடாக்கின் கால்வன் (கல்வன், கல்வான்) பள்ளத்தாக்கில் சீனாவின் தாக்குதலில் மொத்தம் 76 இந்திய வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் இவர்கள் அனைவரும் குணமடைந்து வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
லடாக்கின் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்க சீனா ராணுவம் முயற்சித்தது. இந்த ஆக்கிரமிப்பு முயற்சியை தீரத்துடன் நமது ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.
முற்கள் சுற்றப்பட்ட கம்பிகள்.. இந்திய வீரர்களை தாக்க சீனா பயன்படுத்திய ஆயுதம்.. லீக்கான புகைப்படம்!
20 ராணுவ வீரர்கள் வீர மரணம்
இம்மோதலில் சீனாவின் கொடூரமான தாக்குதலில் தமிழகத்தின் பழனி உள்ளிட்ட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் 43 ராணுவத்தினர் பலியாகினர். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.
எத்தனை பேர் படுகாயம்?
இந்த நிலையில் படுகாயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்தன. சீனாவுடனான மோதலில் மொத்தம் 75 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்கின்றது நமது ராணுவ தரப்பு.
தேசப் பணிக்கு திரும்பும் வீரர்கள்
மேலும் லே ராணுவ மருத்துவமனையில் 18 ராணுவத்தினர் சிகிச்சை பெற்றனர். அவர்கள் அனைவரும் 15 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் பணிக்கு திரும்புவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மருத்துவமனைகளில் 58 ராணுவ வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இன்னும் ஒருவாரத்தில் தேசப் பணிக்கு திரும்புவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யாரும் பிடிக்கப்படவில்லை
இதனிடையே ராணுவ வீரர்கள் சிலர் சீனாவால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளையும் ராணுவத் தரப்பு நிராகரித்திருக்கிறது. நமது ராணுவ வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்றும் விளக்கம் தந்துள்ளது ராணுவம்.