செப். 12 முதல்.. நாடு முழுக்க கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும்.. ரயில்வே வாரியம் அறிவிப்பு
டெல்லி: செப்டம்பர் 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக ரயில்வே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஜூன் மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டது.

வெளிமாநிலங்களில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல கொஞ்சம் கொஞ்சமாக ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டது.தற்போது நாடு முழுக்க 230 ரயில்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
அதோடு சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது மீண்டும் தங்கள் பணியிடங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் தற்போது வரை இயக்கப்பட்டு வந்த திசைக்கு எதிர் திசையில் ரயில்களை இயக்க உள்ளனர். அதாவது சிறுநகரங்களில் இருந்து பெரு நகரங்களை நோக்கி ரயில்களை இயக்க தொடங்கி உள்ளனர்.
தற்போது இயங்கும் 230 ரயில்களில் மிக குறைவான கூட்டம் செல்லும் ரயில்கள் நிறுத்தப்படும். தற்போது இருக்கும் பெரும்பாலான ரயில்களில் கூட்டம் 75% இருந்து 80-85% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் வேறு மாநிலங்களை அதிகம் பயணம் செய்ய தொடங்கி உள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் முதல் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும். அதன்பின் கூட்டத்தை பொறுத்து மேலும் ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications