'உஜ்வாலா' சிலிண்டர் கொடுத்ததே மத்திய அரசு, அதை ரீஃபில் செய்ய 90 லட்சம் மக்கள் ரெடியில்லை! இதோ டேட்டா
டெல்லி: இந்தியாவில் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி உஜ்வாலா திட்டத்தை துவக்கி நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் உயர்ந்து வரும் விலையால் பிரதமர் திட்டத்தில் உள்ள 90 லட்சம் பயனாளிகள் மீண்டும் மாற்று சிலிண்டர் வாங்கி பயன்படுத்தாத நிலை உள்ளது.
இந்தியாவில் கிராமங்கள் தோறும் ஏழை மக்கள் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய பாஜக அரசு உஜ்வாலா எனும் திட்டத்தை துவங்கியது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா எனும் பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் மே 1, 2016 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
மூன்றாவது ஆண்டில் மோடி அரசு.. பெண்கள் நலனுக்காக கொண்டு வந்த உஜ்வாலா திட்டம் வெற்றியா, தோல்வியா?
9 கோடி இணைப்புகள்
2020ம் ஆண்டுக்குள் 8 கோடி பேருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இது பூர்த்தி செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த நிதியாண்டில் இத்திட்டத்தின் 2.0 துவங்கப்பட்டது. இதன்மூலம் சிலிண்டர், அடுப்பு ஆகியவை ஒரு கோடி பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது வரை பிரதமரின் சிலிண்டர் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டம்
இந்நிலையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் பற்றிய தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சந்திரசேகர் கவுர் என்பவர் சில விபரங்களை கேட்டிருந்தார். இவரது கேள்விகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனங்கள் பதிலளித்துள்ளன.
90 லட்சம் பேர்
இதன்மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் இத்திட்டத்தில் உள்ள 90 லட்சம் பயனாளிகள் தங்களுக்கு வழங்கிய சமையல் எரிவாயு சிலிண்டர் காலியான பிறகு மீண்டும் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 2021 மார்ச் வரை வழங்கிய மொத்த சிலிண்டர் இணைப்புகளில் 65 லட்சம் வாடிக்கையாளர்கள் மீண்டும் சிலிண்டர் வாங்காமல் உள்ளது தெரியவந்தது. இதேபோல் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் முறையே 9.1 லட்சம் மற்றும் 15.96 லட்சம் பேர் 2வது முறையாக சிலிண்டர் பெறவில்லை.
ஒருமுறை மட்டுமே மாற்று சிலிண்டர்
மேலும் உஜ்வாலா திட்டத்தில் பெற்ற சிலிண்டர் தீர்ந்த பிறகு ஒரு முறை மட்டும் சிலிண்டர் ரீபில் செய்தவர்களின் எண்ணிக்கையும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து 2வது முறையாக சிலிண்டர்கள் பெற்ற வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 லட்சமாகவும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 27.58 லட்சமாகவும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 28.56 லட்சமாகவும் உள்ளது. இதன்மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் மட்டுமே தீர்ந்துபோன சிலிண்டருக்கு பிறகு மாற்று சிலிண்டர் பயன்டுத்தி உள்ளனர்.
விலை உயர்வால் விரும்பவில்லை
இவ்வாறு 90 லட்சம் பேர் மீண்டும் சிலிண்டர் வாங்கி பயன்படுத்தாதற்கு தொடர்ந்து உயர்ந்து வரும் விலை தான் காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் சிலிண்டர் முன்பதிவு, வினியோகம் குறித்து லோக்சபாவில் சமீபத்தில் மத்திய அரசு பதிலளித்து இருந்தது. அதன்படி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் நுகர்வு ஆண்டுதோறும் ஒரு இணைப்புக்கு 3.66 ரீபில்களாக உள்ளது. கொரோனா பரவலால் 2020 ஏப்ரல் 1 முதல் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு அரசாங்கம் மூன்று முறை இலவசமாக ரீபில்கள் வழங்கியது. இது 2020 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 14.17 கோடி சிலிண்டர்கள் இலவசமாக நிரப்பி கொடுக்கப்பட்டுள்ளன'' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தவறிய மத்திய அரசு
பெட்ரோலிய துறை தொடர்பான நிலைக்குழு உறுப்பினரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரத்யுத் போர்டோலோய் கூறுகையில், ‛‛இத்திட்டம் நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டாலும் சில குறைபாடுகள் உள்ளன. இதனை நிவர்த்தி செய்ய அரசு தவறிவிட்டது. மானியங்கள் வழங்குவதாக மத்திய அரசு கூறினாலும் அது மக்களை சென்றடைகிறதா என்பதில் குளறுபடி உள்ளது. தற்போது சிலிண்டர்களுக்கான முழுத்தொகையையும் மக்கள் செலுத்தும் நிலை உள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் சிலிண்டர்கள் காட்சி பொருளாகவே உள்ளன. மேலும், உஜ்வாலா யோஜனா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவான ஆய்வு செய்ய குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.