பெண் மருத்துவர் பலாத்காரம்..உயிரோடு எரித்த கொடூரர்களை என்கவுண்டர் செய்த போலீஸ்! போலி என பரபர அறிக்கை
ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2019ஆம் ஆண்டில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் நால்வரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற நிலையில், அது போலியானது என உச்சநீதிமன்றம் அமைத்த குழு பரபரப்பு அறிக்கையினை சமர்பித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே கடந்த 2019ஆம் ஆண்டில் 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர்.
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட, இந்தக் கொடூரக் கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திட்டமிட்டு செய்யப்பட்ட பஞ்சர்.. உதவி செய்வதாக நடித்து வன்புணர்வு.. மருத்துவர் கொலையின் ஷாக் பின்னணி
பாலியல் வன்கொடுமை
27 ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பணி முடிந்து இரவு வீடு திரும்பும் போது உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர்.
உயிரோடு எரித்த கொடூரம்
பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அந்தப் பெண் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவரின் கை, கால்களைக் கட்டியுள்ளனர். பின்னர், மருத்துவரின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக மதுகலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கவைத்துள்ளனர். பெண் மருத்துவர் மயக்கம் அடைந்தபிறகு அவரை லாரியில் ஏற்றி சம்பவம் நடந்த பாலத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பெட்ரோல் வாங்கி வந்து அவரது உடலை எரித்துள்ளனர்.
4 பேர் கைது
இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்த நிலையில், நாடாளுமன்றத்திலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விசாரணை குழு
இந்நிலையில், குற்றவாளிகளை விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். பெண் டாக்டரை எரித்து கொன்ற இடத்திற்கு அழைத்து சென்ற போது, குற்றவாளிகள், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றதாகவும், இதனையடுத்து , அந்த இடத்திலேயே, குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர். ஆனால் இது போலி என்கவுண்டர் என மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின.
விசாரணை அறிக்கை
இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு குழு ஒன்றினை அமைத்து உத்தரவிட்டது. அந்த குழு என்கவுண்டர் நடந்தபோது பணியில் இருந்த போலீஸார், உயிரிழந்தவர்களில் உடலை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள், குற்றவாளிகளின் உறவினர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்த நிலையில், ஹைதராபாத்தில் கடந்த 2019ம் ஆண்டு போலீசார் நடத்திய என்கவுண்டர் போலியானது என உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கு மாற்றம்
அந்த அறிக்கையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில் மூவர் மைனர்கள் எனவும், நால்வரும் வேண்டும் என்றே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என கூறியுள்ளனர். மேலும் இது போலீசாரின் திட்டமிட்ட செயல் தான் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இது என்கவுண்டர் வழக்கு என்பதால், உயர் நீதிமன்றத்திற்கு இதன் விசாரணையை அனுப்புகிறோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலையிலான அமர்வு மாற்றியுள்ளது.