குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆம் ஆத்மி வைத்த ட்விஸ்ட்..யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
Recommended Video
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் ஜூலை 18ம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்பாளர்கள் யார்?
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.

ஆதரவு கோரி பயணம்
கடந்த சில வாரங்களாக யஷ்வந்த் சின்ஹா மற்றும் திரெளபதி முர்மு ஆகியோர் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றனர். இதனிடையே எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காத தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி யஷ்வந்த் சின்ஹாவுக்கு, ஹார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி திரெளபதி முர்முவுக்கும் ஆதரவளித்து அதிர்ச்சி கொடுத்தனர். அதேபோல் சிவசேனா கட்சி திடீரென திரெளபதி முர்முவை ஆதரிப்பதாக அறிவித்தது.

ஆம் ஆத்மி ஆலோசனை
இந்த நிலையில் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொண்டனர்.

ஆம் ஆத்மி ஆதரவு
இதன்பின்னர் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், பாஜக கூட்டணி யின் வேட்பாளர் திரெளபதி முர்மு மீது மரியாதை இருந்தாலும், இந்தத் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். அதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications