100 மடங்கு அதிக கதிர்வீச்சு, மோசமான பாதிப்பு.. 5ஜி சேவைக்கு தடை வேண்டும்.. பாலிவுட் நடிகை வழக்கு
டெல்லி: இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 5ஜி தொழில்நுட்பம் மிகவும் அபாயமானது என்பதால் அதற்குத் தடை விதிக்க கூறி பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பரவலாக 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பம் மிகவும் அபாயமானது என்பதால் அதற்குத் தடை விதிக்க கூறி பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் ஜூன் 2ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இது குறித்து பாலிவுட் நடிகையும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான ஜூஹி சாவ்லா கூறுகையில், டெலிகாம் நிறுவனங்களின் 5ஜி தொழில்நுட்பத்தின் கதிரியக்கத்தால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பூச்சிகள் என அனைத்தும், ஆண்டு முழுவதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இது தற்போதுள்ள அளவை 10 முதல் 100 மடங்கு அதிகமாகக் கதிர்வீச்சை வெளியிடும். இந்த 5 ஜி தொழில்நுட்பம் மூலம் மனிதர்களுக்குக் கடுமையான, மீளமுடியாத பாதிப்பும் பூமியின் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் நிரந்தர சேதமும் ஏற்படும்.
எனவே, 5ஜி தொழில்நுட்பம் மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பானது என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்து சான்றளிக்க வேண்டும். அதற்கு தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்" என அவர் தெரிவித்துள்ளார்.