ஆன்லைனில் வாக்களிக்கும் ஆப்ஷன், NRI-க்கு வாக்குரிமை.! வருகிறது முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள்
டெல்லி: தேர்தல் நடைமுறைகளில் மத்திய அரசு சீர்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு தற்போது இருக்கும் தேர்தல் நடைமுறைகளில் பல முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாக சில காலமாகவே தகவல் வெளியாகி வருகிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் சில விதிகள் காலத்திற்குப் பொருத்தமற்றது என்பதால் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர் சீர்திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இலவசத்தை எதிர்க்கும் பிரதமர்! கட்டுப்பாடுகளுடன் வரும் தேர்தல் ஆணையம்! வாக்குறுதியை அள்ளிவிட முடியாது
சீர்திருத்தங்கள்
தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அறிக்கைகளில் குறிப்பிடப்படும் திட்டங்களுக்கு எப்படி நிதி திரட்டப் போகிறார்கள் என்பது குறித்தும் அரசியல் கட்சிகள் அறிவிக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வரும் என்று சட்ட அமைச்சகம் ட்வீட் செய்த நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
கிரண் ரிஜிஜு உறுதி
தேர்தல் செயல்முறைகள், விதிகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை செய்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய முடிவை எடுக்கும் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். மேலும், மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் இப்போது தகவல் வெளியாகி உள்ளது.
70-80 மாற்றங்கள்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் உட்பட மொத்தம் 70-80 மாற்றங்களைத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் சட்ட அமைச்சகம் தனது கருத்தைக் கூறியதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தேவையான மாற்றங்களைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் வாக்களிக்கும் முறை
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமைகள், ஆன்லைன் வாக்களிக்கும் ஆப்ஷன், ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் விதிகள் மற்றும் கருத்துக் கணிப்பு தொடர்பான புதிய விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் முன்மொழிந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் தாமதமாக இந்த விதிகளைக் கொண்டு வந்தால் அது பயனற்றதாக மாறிவிடும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
பல அரசியல் கட்சிகளும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்து வெளிப்படையாகவே தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், இப்போது முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்களில் "ஒரே தேசம் ஒரே தேர்தல்" குறித்து எவ்வித கருத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆதார் வாக்காளர் பட்டியல் இணைப்பு என்பது கட்டாயமாகப்படாது என்றும் அது சுய விருப்பமாகவே இருக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இலவசங்கள்
தேர்தல் சட்டத் திருத்தங்களில் இலவசங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்டவை குறித்த வரையறையை வரலாம் என்றும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் இலவசங்கள் தொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில், ஏற்கனவே இலவசங்களை வரையறுக்க வேண்டும் என்று சட்ட அமைச்சகத்தைத் தேர்தல் ஆணையம் அணுகியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நிதி ஆயோக், சட்ட ஆணையம் மற்றும் தேர்தல் கமிஷன் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.