துர்நாற்றத்தை மறைக்க அகர்பத்தி! 'அமெரிக்க கிரைம் ஷோ' பார்த்து கொலைஅரங்கேற்றம்? திடுக்கிடும் தகவல்
டெல்லி: டெல்லியில் லிவிங் டூ கெதர் முறையில் வசித்த வந்த நிலையில், பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க கிரைம் ஷோ ஒன்றை பார்த்து பெண்ணை கொலை திட்டமிட்டது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் லிவிங் டூ கெதர் முறையில் ஷ்ரத்தா என்ற பெண்ணும் அஃப்டாப் அமீன் என்ற இளைஞரும் வசித்து வந்தனர்.
மும்பையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
லிவிங் டுகெதர் பயங்கரம்! காதலியை 35 துண்டுகளாக வெட்டி.. நாய்களுக்கு வீசி வந்த இளைஞர் - அலறும் டெல்லி
அமீன் ஷ்ரத்தா ஜோடி
இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு வந்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அமீனிடம் ஷ்ரத்தா வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அமீன் இதை ஏற்கவில்லை.
35 துண்டுகளாக வெட்டி..
இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஷ்ரத்தாவின் தொந்தரவால் ஆத்திரமடைந்த அமீன், அவரை தீர்த்துக்கட்டுவது என முடிவு செய்தார். அதன்படி, கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை அமீன் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக தினமும் இரவு 2 மணியளவில் டெல்லியின் மெஹ்ராலி வனப்பகுதிகளில் வீசியிருக்கிறார்.
கொலை வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?
கடந்த 8 ஆம் தேதி ஷரத்தாவின் தந்தை டெல்லிக்கு வந்து தனது மகள் வசித்த இடத்தை கண்டுபிடித்து இருக்கிறார். அப்போது வீடு பூட்டியிருந்ததால் காவல் நிலையத்தில் ஷ்ரத்தாவின் தந்தை புகார் அளிக்கவே, இந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சைக்கோ கொலையாளி போன்ற கொடூர கொலையை அரங்கேற்றி விட்டு எந்த வித சலனமும் இன்றி அமீன் நடமாடி வந்தது போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.
வெட்டிய உடலை வைக்க புதிதாக பிரிட்ஜ்
டெல்லி மட்டும் இன்றி நாடு முழுவதையும் பரபரப்பாக பேச வைத்த இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பி வருகின்றன. இதனிடையே, ஷ்ரத்தாவை கொலை செய்து விட்டு உடலை துண்டு துண்டுகளாக வெட்டிய அமீன், அதை வைப்பதற்காக புதிதாக ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கியிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துர்நாற்றம் அடித்துவிடக்கூடாது என்பதற்காக..
அதேபோல், தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டில் யாருக்கும் துர்நாற்றம் அடித்துவிடக்கூடாது என்பதற்காக அகர்பத்திகளை வாங்கி அறை முழுவதும் வைத்து இருக்கிறார் அமீன். சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த கொடூர கொலையை அமெரிக்காவில் பிரபலமான கிரைம் திரில்லர் ஷோவான 'டெக்ஸ்டர்' பார்த்து அதன்படி அமீன் அரங்கேற்றியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின்
ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரில் அப்தாப் அமீன் பூன்வாலாவை கடந்த 26 அம் தேதி கைது செய்த பிறகே இந்த கொடூர கொலை சம்பவமும் அதுகுறித்த திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி அதிரவைத்து வருகிறது. அமீனை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், இந்தக் கொலை சம்பவம் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனித உடல் பாகங்கள்தானா?
வனப்பகுதியில் இருந்து சில உடல் பாகங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அவை மனித உடல் பாகங்கள்தானா? என உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்ற பயன்படுத்தப்பட்ட கத்தி இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.